Tuesday, November 30, 2010

இஸ்லாமியத் திருமணம் ஒரு பார்வை (பகுதி 4)

கே 28 : மஹர் தொகைக்கு உச்ச வரம்பு உண்டா?

நிச்சயமாக அது மாப்பிள்ளையின் ஒரு மாத ஊதியத்திற்கு (இக்காலப்படி) மேம்படாததாக இருக்கும்.

கே 28 : அதை யார் நிர்ணயிப்பது?

பெண்ணின் பொறுப்பாளர் தான் நிர்ணயிக்க வேண்டும்.

கே 29 : பெண்ணே, 'எனக்கு இவ்வளவு தா!' என்று டிமாண்ட் பண்ண வேண்டும். என்றும், கிடைக்க வழியில்லை எனும் போது அந்த மாப்பிள்ளையை நிராகரிக்க வேண்டும் என்றும் சிலர் சொல்கிறார்களே!?

வரதட்சணை வாங்குகிற ஆண்கள் மீது ஏற்பட்ட வெறுப்பில் அப்படிச் சொல்லியிருக்கலாம். அதாவது நீங்கள் டிமாண்ட் செய்யுங்கள். இந்த ஆண் வர்க்கம் பெண் கிடைக்காமல் காய்ந்து போய் வழிக்கு வரட்டும் என்ற அர்த்தத்தில் பேசி இருக்கலாம்.

ஆனால் இந்த ஆணாதிக்க உலகில் 'பகிரங்கமான எய்ட்ஸை சுமந்து வந்து, அதை மனைவிக்கும் பரப்பி விட்டு, அவள் செத்துப்போன உடனேயே, அவன் எய்ட்ஸ் நோயாளி என பகிரங்கமாகத தெரிந்தும், அவனுக்கு பெண் கொடுக்க நான் நீ எனப் போட்டிப் போட்ட ஒரு கிராமத்தை' ஜூனியர் விகடன் பத்திரிகை சுட்டிக் காட்டிய பிறகும், 'பெண்களே! நீங்கள் உங்களுக்கான மகரை கேளுங்கள். அதுவும் லட்சக்கணக்கில் கேளுங்கள். என்று உசுப்பி விடுவது முதிர் கன்னிகளை உருவாக்க மட்டுமே உதவும்.

(ஒரு கொசுறு செய்தி : சென்னையின் பிரதான பள்ளிவாசல் ஒன்றில் இமாமாக பணிபுரியும் பிரதான ஆலிம். ஒரு சஹர் நேர சிந்தனையின் பொது, "பெண் கேட்டு வரும் மாப்பிள்ளையிடம் எனக்கு ரெண்டு லட்சம் தர்றியா? என்று பெண்ணே கேட்க வேண்டும். மாப்பிள்ளை சொல்வான், 'இல்லங்க! நம்மால ஒரு லட்சந்தான் கொடுக்க முடியும்' என்றால், 'ஒரு லட்சமா? அப்படின்னா அடுத்த வீட்டுல ஒரு கருப்பி இருக்கா, அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ' என்று சொல்ல வேண்டும்" என்றார்.

இவர், இஸ்லாம் வெறுத்த நிற இழிவைத் தூண்டுவதோடு, மஹர் என்பது திருமணக் கொடை என்பதை மாற்றி, அதை ஒரு பெண்ணுக்கான விலை என்றாக்கி, பெண்களை அசிங்கப் படுத்துகிறாரல்லவா? இது போல அறிவாளிகள் நட்டு நடு ராத்திரியில் நம்மை உட்கார வைத்து மெண்டல் ஆக்குவதால்தான் 'ஐயா புண்ணியவான்களே! சகர் சிந்தனையே வேண்டாம் ஐயா!' என்று "ஹை அதுஷ் ஷரீ ஆ" போன்ற அமைப்புகளும், ஜமா அதுல் உலமாப் பேரவையும் அலற ஆரம்பித்துள்ளன)

கே 31 : ஒரு பொற்குவியல் அளவுக்கு மகர் கொடுக்க வேண்டும் என்று குர் ஆன் சொன்னதாகவும், அந்தக் காலத்திலேயே மஹருக்கு உச்ச வரம்பு கொண்டு வர வேண்டும் என்று உமர் (ரழி) விரும்பியபோது, ஒரு கிழவி இந்த வசனத்தைக் காட்டி உமருக்கு உணர்வூட்டியதாகவும் சிலர் சொல்கிறார்களே?

இது உமர் (ரழி) குர் ஆனை விளங்காதவர் போலவும், ஒரு சாதாரணக் கிழவி உமருக்கே அறிவுறுத்தியதன் மூலம், இன்னும் பல விஷயங்களில் உமருடைய பேச்சைக் கேட்க வேண்டியதில்லை (தராவீஹ் 20 ரக் அத் போல) என்பதற்காகவும் சில நூதனர்கள் தொண்டை கிழியப் பேசும் விஷயம். இது.

குர் ஆனின் அந்த வசனம் முதலில் மஹர் சம்பந்தமான ஆயத்தே அல்ல. நிசா சூராவின் இருபதாம் வசனம் அது. சுய சிந்தனையோடு இருந்தால் படித்துப் பாருங்கள். (குர் ஆனே சுய சிந்தனை இருந்தால்தான் தன்னைப் படிக்க ஏவுகிறது.)

அந்த ஆயத்

"நீங்கள் மணமுடித்திருக்கும் மனைவி உங்களுக்கு ஒத்து வராத பட்சத்தில், நியாயமான காரணங்களுக்காக இன்னொரு பெண்ணை மணமுடிக்க நீங்கள் விரும்பினால், முதல் பெண்ணை தலாக் விடும் பட்சத்தில் திருமணம் முடித்த காலத்தில் இருந்து, அன்று வரை அப்பெண்ணுக்காக நீங்கள் செலவழித்தது, (மஹர் உட்பட) ஒரு போற்குவியலாக இருந்தாலும் அதில் எதையும் திரும்ப எடுத்துக் கொள்ளாதீர்கள். அவளுக்கு செலவழிப்பது உங்கள் கடமையாக இருக்க, தலாக்கை காரணம் காட்டி அநீதமாகவும் ஈனத்தனமாகவும் அபகரித்துக் கொள்கிறீர்களா?"

இதுதான் அவ்வசனம்.

இல்லையென்று யாரவது சொல்லட்டும் பார்க்கலாம்.

உங்களுக்கு நான் பாடம் நடத்துவது என்றால்,

ஒரு ஏழை மணமுடிக்கும்போது, மஹராக 1000 ரூபாய் கொடுக்கிறான். அவனின் ஐந்து வருட தாம்பத்தியத்தில் சாப்பாடு, வீட்டுச் செலவு, ஆடை வகைகள் போக சின்னஞ்சிறு நகைகள், பரிசுப் பொருள்கள் என 25 ,000 செலவழிப்பான்.

நடுத்தர மணமகன் மஹராக 5 ,000 மேலே சொன்ன கடமையான செலவுகள் போக, மேலே சொன்ன மற்றவைகளுக்காக 2 லட்சம் செலவழிப்பான்.

பணக்கார மணமகன் மஹராக 5 பவுன் சங்கிலி (சுமார் ஒரு லட்சம்) மேலே சொன்ன கடமைகள் போக, பரிசாக அவன் கொடுப்பதை ஒரு பொற் குவியலுக்கு சமமாகக் கொண்டால், ....................,

இப்போது அல்லாஹ் சொன்னதை படியுங்கள்.

சாதாரணன் கொடுக்கும் 25000 லிருந்து, பணக்காரன் தரும் பொற்குவியல் வரை எவ்வளவு செலவழிப்பினும் அதை திரும்ப வாங்கி உன்னை ஈனப்படுத்திக் கொள்ளாதே!

இதுதான் அல்லாஹ் சொல்வது.

மஹர், தகுதிக்குத் தக்க மாதிரிதான் என்பதை இன்னொரு வசனத்தில் நம்மைப் படைத்த இறைவன், நம்மைத் தெரிந்த இறைவன் சொல்வதை இந்த அரைகுறைகள் அறிந்தால், "லட்சம் கேளு! கோடி கேளு! என்று பெண்களை உசுப்பி விட்டு, முதிர்கன்னிகளை உருவாக்கி, அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாக மாட்டார்கள்.

அந்த வசனம்............

(இன்ஷா அல்லாஹ் 5 ஆம் பகுதியில்)

Thursday, November 25, 2010

சிவகாசி அஸ்மத் பாடல்கள்- 6

காபா ஆலயத்தின்
எழில் கண்ட சீலரை
வரவேற்கும் தீனின் பாமாலை!
(காபா.......)

அருளே சிந்தும் நிலத்தில்
உங்கள் பாதம் நடந்தது.
அன்பு நபிகள் துயிலும் தளத்தில்
உங்கள் பார்வை படிந்தது.
வழிகள் தோறும் அக மகிழ்ந்து
வல்ல நாயன் அருள் சுமந்து
வாழ்ந்த சீலரை
வரவேற்கும் தீனின் பாமாலை!
(காபா.......)

அந்த காபா நிழலில் இறையை
உங்கள் இதயம் துதித்தது.
அதன் பொருட்டால் இந்த மண்ணில்
பேரின்பம் உதித்தது.
கல்வி தேடும் பாலகர்க்கு
கரங்கள் ஏந்தி இறைஞ்சுதற்கு
நாடும் நேசரை
வரவேற்கும் தீனின் பாமாலை
(காபா......)

(வெள்ளி நிலாவினிலே............. என்ற இசையில்)

Monday, November 22, 2010

மோதினார்கள்

“முஅத்தின்கள்” - அழைப்பாளர்கள் என்ற வார்த்தை மருவி மோதினார் என்றானது சரியோ, தவறோ, மோதினார்கள் வேலைக்கென்று அல்லாஹ் சில தியாகிகளை தேர்ந்தெடுத்தான். இப்போதுள்ளவர்களை நான் சொல்லவில்லை.

முந்தைய தலைமுறை மோதினார்கள், வேலைக்கு வந்ததில் இருந்து சமுதாயத்தில் மோதிக்கொண்டே இருந்ததால், அல்லது சமுதாயம் அவர்களோடு மோதிக்கொண்டே இருந்ததால் மோதினார் என்ற பெயருக்குப் பொருத்தமானார்கள்.
அன்று மோட்டார் இல்லை. பள்ளிவாசல் பியூன் இல்லை. பள்ளிவாசளுக்கென்று துப்புரவுத் தொழிலாளி இல்லை. ஆனால் எல்லாமாக இருந்தவர்கள் அன்றைய மோதினார்கள். அவர்கள் காலத்தில் ஹவ்லில் யாராவது அதிகத் தண்ணீர் செலவழித்தால் விரட்டி விரட்டி அடிப்பார்கள். காரணம் கிணற்றில் இறைத்து ஒவ்வொரு சொட்டாக ஹவ்லுக்கும், பாத் ரூமுக்கும் கொண்டு சேர்த்த சிரமம் அவர்களுக்குத்தான் தெரியும்.

நான்கு மணி அதிகாலை எழும் அவர்கள், பள்ளிவாசலை இரவில் பூட்டி படுக்கப் போகும்போது பத்து மணிக்கு மேல் ஆவது சர்வ சாதாரணம். சமுதாயத்தின் முதல் குடிமகனாக அவர்களை அறிமுகப் படுத்திய இஸ்லாமில், அவர்கள் மதிக்கப் பட்டதோ, கடைக் கோடி மனிதனாக. ஆம். இஸ்லாமில் குலத்தாழ்ச்சி இல்லை. ஆனால் மோதினார்கள் மதிக்கப் பட்டதோ தாழ்வான பிறவியாக மட்டுமே.
இமாம்களை விட சொர்க்கத்திற்கு முந்திச் செல்பவர்கள் முஅத்தின்கள் என்று சொல்லித் தரப்பட்ட சமுதாயத்தில், முஅத்தின் சத்தம் எட்டும் தொலைவு பாவங்கள் நீக்கப் படுகிறது என்று சொல்லித் தரப்பட்ட சமுதாயத்தில் நாம் முஅத்தின்களுக்குத் தரும் மரியாதை என்ன? சிந்திப்போம்.
என்னை பாதித்த இரண்டு மோதினார்களின் நினைவுக்காக எழுதப்பட்ட எழுத்து இது. ஒருவர் இருமேனியின் நீண்ட கால மோதினார் முஹம்மத் இப்ராஹீம் அப்பா. இன்னொருவர், வேதாளை முஅத்தினாக இருந்து நான் இதை எழுதும் வேளை மரணமாகி விட்ட முஹைதீன் அப்துல் காதர் அப்பா. இருவரும் ஐம்பது ஆண்டுக்கு மேல் இரண்டு ஊரிலும் அடிப்படை வசதி அற்ற காலத்தில் பனி செய்தவர்கள்.
உங்கள் ஊரிலும் பழைய மோதினார்கள் இருந்து, வாழ்க்கைக்குப் போராடிக் கொண்டிருந்தால் தயவு செய்து மேற்கண்ட இரண்டு ஊர் மக்களையும் போல் அவர்களை தத்தெடுங்கள். கவனியுங்கள்.
அல்லாஹ் சேவை மனப்பான்மையுடன் உள்ள மு அத்தீன்களின் ஈருலக வாழ்வை செழிக்கச் செய்வானாக!
மர்ஹூம்களாகி விட்ட என் அன்பிற்குரிய இருமேனி மற்றும் வேதாளை மோதினார்களின் மறுமை வாழ்வை சொர்க்கத்தைக் கொடுத்து வளமாக்குவானாக!

ஆமீன்.

Saturday, November 13, 2010

சிவகாசி அஸ்மத் பாடல்கள் - 5

நெஞ்சில் தேன்மொழி
சிந்தும் தீன்மறை
நீங்கள் ஓதி வர- புவி
எங்கும் நன்னெறி
பூக்கும் ஏகனின்
நேசம் கூடி வர
உலகாளும் மன்னவனின்........ அருளும்......... மலரும்
அலை மோதிடும் இடர்களும்
விலகிடும் வரையினில்
(நெஞ்சில்.....)

மாயை சூழ்ந்த வையம்
மாற வேண்டுமென்று
ஹீராவிலே ரம்ஜானிலே
தந்தான் இறை செந்தேன் மறை!
உலகம் உள்ளவரை வழி காட்டும்
எங்கள் வண்ண மறை!
இதனைப் பயிலும் இதயம் தெளியும்
இரு லோகமும ஒளி பெற களிப்புற!
(நெஞ்சில்......)

தூய்மை ஞானப் பாதை
தூதுரைக்கும் வேதம்
மண் மூடினும் மறுமை வரை
காக்கும் துணை கலைமாமறை!
இருளில் ஒளி வழங்கும் இறை போதம்
ஒரு சொல் கோடி பெறும்!
இனிதே மொழியும் இதயம் தெளியும்
எழிலோங்கிடும் சிந்தனை பெருகிட!
(நெஞ்சில்.....)

(தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி......இசையில்)

Thursday, November 11, 2010

சிவகாசி அஸ்மத் பாடல்கள் - 4

வானேறிச் செல்கின்ற மேகங்களே- நபி
வரலாற்றினை எங்கும் சொல்லுங்களேன்!
பூஞ்சோலை தன்னில் மின்னும் புஷ்பங்களே -எங்கள்
பூமான் நபி புகழ் பாடுங்களேன்!
(வானேறிச்.................)

பெற்றோர் துணையிழந்த பாலர் நபி- சிறு
பாவமும் புரியாத சீலர் நபி!
கற்றோர் மனம் விரும்பும் தூதர் நபி- திருக்
குர் ஆனை எமக்கீந்த நாதர் நபி!
திருக்குர் ஆனை எமக்கீந்த நாதர் நபி!
(வானேறிச்.................)

மாறாதிருக்கும் மறை வழி காக்கவே - எங்கள்
மா நபி களம் சென்று போராடினார்
தீராதிருக்கும் தீய நெறி போக்கவே- நபி
தீனோர்க்கு அருள் பொங்கும் வழி காட்டினார்!
நபி தீனோர்க்கு அருள் பொங்கும் வழி காட்டினார்
(வானேறிச்.................)

தென்றல் சுமந்து செல்லும் பாங்கோசையில் -தினம்
தெவிட்டாமல் தவழ்கின்ற திருப்பேரது!
தேடும் இதயங்களின் தாகம் இது- எம்
திருத்தூதர் புகழோதும் ராகம் இது!
எங்கள் திருத்தூதர் புகழோதும் ராகம் இது!
(வானேறிச்.................)

(புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே....!- இசையில்)

ஒபாமா வருகை - சந்தேகங்கள்

அமெரிக்காவின் கறுப்பின ஜனாதிபதி ஒபாமா இந்தியாவுக்கு வருகை என்றதும், ஒரு மாறுதலான ஏற்பாடுகள் அமையும் என்று எதிர் பார்த்தால், அதே அமெரிக்க பாதுகாவலர்கள் முன்னாலேயே வந்து, ஏற்பாடுகளை கவனித்தது, இந்திய ஜனாதிபதியே அமேரிக்கா போனாலும் பாதுகாப்புக் கெடுபிடி என்ற பெயரில் அசிங்கப் படுத்தி விட்டு, பிரச்சனையாகும்போது, “சாரி” என்ற ஒற்றை வார்த்தையில் அதை கழுவித் துடைத்து விடும் அமெரிக்கத் திமிர், அமெரிக்க ஜனாதிபதி வரும்போதெல்லாம், அமெரிக்கப் பாதுகாப்பு வளையத்திலேயே வருவதும், இங்கு ஆளுபவர்கள் சொரணையின்றி, அவர்களின் கட்டுப்பாட்டின் கீழேயே தங்கள் வரவேற்பில் இருந்து எல்லாவற்றையும் வைத்துக் கொள்வதும் ஒபாமா வருகையின் போதும் நிகழ்ந்ததால், ஒபாமா இன்னொரு ஜார்ஜ் புஷ் என்பது தெளிவாகி இருக்கிறது.

இன்னும் சில,

ஒன்றும் இல்லாத காரணத்தை சொல்லி இராக்கை, ஆப்கானிஸ்தானை சிதைத்த அமேரிக்கா இப்போது அழிக்க நினைப்பது பாகிஸ்தானை.

காரணம், ஈரானை அழிக்க எண்ணிய போது ஈராக்கின் சத்தாம் அமெரிக்காவுக்கு தேவைப்பட்டார். பின்னாளில் சத்தாம் தன்மானத்தோடு, நிமிர்ந்த போது, தன் அனைத்து ரகசியமும் அறிந்த சத்தாமை உலகத்தையே முட்டாளாக்கி அழித்தாயிற்று.

அடுத்து ஆப்கானிஸ்தான் போராளிகளை சோவியத் யூனியனை அழிக்கப் பயன்படுத்தி, ரஷ்ய வல்லரசு அந்தக் கிரீடத்தை இழந்தவுடன், எங்கே தன்னை காட்டி கொடுத்து விடுவார்களோ, தனக்கு எதிராக கிளம்பி விடுவார்களோ என்ற பயத்திலேயே, தானே தனக்கு வெடி வைத்துக் கொண்டு (இரட்டை கோபுர கட்டிடத்தை இடித்துக் கொண்டு) கேவலமாக ஆப்கானிஸ்தான் போராளிகள் மீது பழி போட்டு, ஆப்கானிஸ்தானை சீரழித்து, ஒரு அடிமை அரசை ஏற்படுத்தியாயிற்று.

அடுத்த அமெரிக்காவின் குறி ஈரானாகவே இருந்த நிலையில் ஈரானில் இருந்து வரும் சிக்னல்கள் பயங்கரமாக இருப்பதால் (தினமும் ஏவுகணை சோதனை, மக்களின் அரசுக்கு ஆதரவான போக்கு, எதிரிகளை உண்டாக்க எண்ணிய அமெரிக்காவுக்கு ஈரானின் தேர்தல்களில் ஆப்பு, ஆன்மிகத் தலைவர்தான் அமெரிக்காவுக்கு எதிரி என்ற நிலை மாறிப் போய், அரசுத் தலைவர் நிஜாதி யின் ஆர்ப்பரிப்பு அதை விட வீரியம் மிக்கதாகி, எல்லாத் திசைகளும் ஈரானில் அடைபட்டுப் போனதால் பொத்திக் கொண்டது அமெரிக்கா)

இப்போது அமெரிக்காவின் கண்ணை உறுத்துவது பாகிஸ்தான். காரணம் பாகிஸ்தானும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைதான். இந்திரா காந்தி காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் சண்டை நடந்த போது, இந்தியா எல்லை மீறினால் பாகிஸ்தானை காப்பாற்ற அமெரிக்காவின் கப்பற்படையின் பத்தாம் பிரிவு கப்பல் பாகிஸ்தான் கடலில் நன்கூரமிட்டிருந்ததை இந்திய வரலாற்றை ஊன்றி கவனிப்பவர்கள் மறந்திருக்க முடியாது. இன்று வரை கிளிண்டன், புஷ், காண்டலிசா, ஹிலாரி என அமெரிக்க பூச்சாண்டிகள் இந்தியா வரும்போதெல்லாம் பாகிஸ்தானுக்கும் வந்து டபுள் கேம் ஆடியதுதான் நடந்துள்ளது.
இப்போது ஒபாமா அந்தப் பூச்சாண்டி காட்டாதது, "பாகிஸ்தானை நாங்கள் அழிக்க . நினைத்தால் இந்தியா தளம் தர வேண்டும். இல்லையேல் அடுத்த முறை நாங்கள் வரும்போது பாகிஸ்தானுக்கு மட்டும் வந்து இந்தியாவை பயமுறுத்துவோம்" என்ற சிக்னளுக்குத்தான்.

இல்லை என்றால் ஆதாயமில்லாமல் ஆசாமி தன செலவில் (ஒரு நாளுக்கு தொள்ளாயிரம் கோடி செலவில் ஒரு வாரம் அறுபத்து மூவாயிரம் செலவுக்குத் தந்து) வந்து விட்டுப் போவானா?

அமெரிக்காவால் ஒரு புண்ணாக்கும் இந்தியாவுக்குப் புண்ணியமில்லை என்பதும், இந்தியாவின் தயவிலேயே அமெரிக்கா வாழ்கிறது என்பதும், இந்தியா நம்ப வேண்டியது இனி இஸ்லாமிய தேசங்களை மட்டுமே என்பதையும் சில உதாரணங்களில் பார்ப்போம்.

யுரேனியம் கேட்டு ஆஸ்திரேலியாவுடனும், அமெரிக்காவுடனும் ஒப்பந்தம் போட்டு வருடம் பல ஆகியும் ஒரு கிராம் யுரேனியமும் கிடைக்கவில்லை. மாறாக எக்கச்சக்க நிபந்தனைகள் பதிலாக வந்துள்ளன. ஆனால் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த கஜகஸ்தான் யுரேனியம் தாராளமாக தருவோம் என்று கூறியுள்ளது கவனிக்கத் தக்கது.

(சென்ற வருட குடியரசு நாளில் கஜகஸ்தான் அதிபர் இந்தியா வந்தது குறிப்பிடத் தக்கது)

ஈரான் தாராளமாக எரிவாயு தருகிறோம் என்று சொன்ன பிறகும், அது வர வேண்டிய வழி பாகிஸ்தான் என்ற போதும், பாகிஸ்தான் “நாங்கள் எந்த இடையூறும் செய்ய மாட்டோம்” என்ற பிறகும், “உனது விரோதியாக நீ நினைக்கிறவனே சரி என்றாலும், எனக்குப் பிடிக்காத, என்னை பணியாத நாட்டோடு நீ பாசமாக இருப்பதை நான் ஏற்க மாட்டேன்” என்று இன்று வரை எறி வாயுவுக்கு தடையாக இருப்பதை அட்லீஸ்ட் பத்திரிகை படிப்பவர்கள் மறக்க முடியுமா?

எல்லோரும், யோக்கியர் என்கிறார்களே இந்த ஒபாமா, இவர் என்ன சாமானியமா?

இவர் பங்குக்கு வாயாலேயே பூச்சாண்டி காட்டினாரே இந்தியாவுக்கு! ஐ டி துறையில் இந்தியா போன்ற நாடுகளுக்கு அவுட்ரைட் கொடுக்கும் கம்பெனிகளுக்கு வரிவிலக்குக் கிடையாது என்று மிரட்டவில்லையா?

இந்தியாவில் சுரண்டிய பணத்தில் ஐ டி படித்து விட்டு படிப்பு மப்பு ஏறியவுடன் அமெரிக்காதான் தன் ஸ்டேட்டசுக்கு லாயக்கு என்று கப்பல் ஏறும் இந்தியன், ஒருவன் விடாமல் இந்தியா திரும்பி விட்டால் மைக்ரோசாப்ட் உட்பட ஆடிப்போய் அமெரிக்கா, அது சீரழித்த ஈராக்கை விட கீழ்த்தரமாகி விடும் என்பததுதான் உண்மை.
இதையெல்லாம் மறைத்து மொங்காம் போடும் அரசியல் வாதிகளும், ஜால்ரா பத்திரிகைகளும் ஆஹா! ஒஹோ! அமெரிக்க அதிபர் வந்தால் பாலாறு தேனாறு ஓடும் என்று பேசுவதும், எழுதுவதும், நாம் கையை வாயில் வைத்து சப்பிக் கொண்டே வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கை ஆகி விட்டது.

ஒன்று உண்மை, இந்திய சுதந்திரம் பிரதமரை, ஜனாதிபதியை கூண்டுக்குள் நிறுத்தி கொடியேற்ற வைத்துள்ளதையும், குடியரசு, சுதந்திர நாள் வந்தாலேயே, அமெரிக்க உளவுத்துறை அதைச் சொன்னது, இதைச் சொன்னது என்று சொல்லி, இந்திய மக்கள் அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப் போட்ட பாவத்திற்கு, உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை சோதனை செய்யப் படும் கொடுமையும் நடப்பதில் இருந்து,

"ஒரு வேளை 1947 ல் வெள்ளக்காரன்ட்ட இருந்து வாங்குன சுதந்திரத்த, அமெரிக்கன்ட்ட குடுத்துட்டானுவளா?"

Friday, November 5, 2010

சிவகாசி அஸ்மத் பாடல்கள் - 3

சொல்லப் போனா ஏனிந்த கோபம்!
சொல்ல மறந்தா வாராதோ பாவம்.!
தாயினமே பண்பைப் பேணி வாங்க!
தாயினத்தின் பண்பைப் பேணி வாங்க!
(சொல்லப்....)

பண்பான பாத்திமுத்தின் பரம்பரையே
அந்தப் பண்பாட்டை மறந்தது சரியில்லையே!
பண்போடு நாறுகின்ற குணமில்லையே?
உங்கள் அன்றாட வாழ்க்கையிலே தீனுமில்லையே?
உங்கள் அன்றாட வாழ்க்கையிலே தீனுமில்லையே?
(சொல்லப்.....)

பாத்திமுத்தின் வாழ்க்கையை நான் படித்துப் பார்த்தேன்- அந்தப்
பண்புகளை உங்களுடன் ஒத்துப் பார்த்தேன்.
ஊருலகில் நாலு பக்கம் எட்டிப் பார்த்தேன் -ஒரு
உத்தமியும் காணவில்லை வெட்கிப் போனேன்.
ஒரு உத்தமியும் காணவில்லை வெட்கிப் போனேன்
(சொல்லப்.....)

உன் கால்கள் வீதியெங்கும் படலாமா?- தலை
முக்காடு போட வெட்கப் படலாமா?
குர் ஆனின் பாதையை நீ விடலாமா? -இதைக்
கூற வரும்போது கோபப் படலாமா?
இதைக் கூற வரும்போது கோபப் படலாமா?
(சொல்லப்.....)

(வெள்ளக் காக்கா மல்லாக்கப் பறக்குது..... இசையில்)

ஒட்டகக் குர்பானி - என்ன அவசியம்?

தமிழ்நாட்டில் இஸ்லாமியப் பிரிவினைவாதிகள் தலையெடுத்த பின், அதுவும் அதிகப் பிரசங்க அரசியல் பேச ஆரம்பித்த பின், புதிய பித் அத் (அவர்கள் பாஷையில் நரகத்துக்கு போக வைக்கும் செயல்) ஒன்று ஆரம்பமானது.
அது............ ஒட்டக குர்பானி.
அல்லாஹ் ஒட்டகத்தையும் அறுக்கச் சொல்லியிருக்கிறான். எனவே செத்துப் போன ஒரு அமலுக்கு நாங்கள் தான் உயிர் கொடுக்கிறோம் என்று கிளம்பி, இயக்கங்களின் சார்பில் மொத்தமாக ராஜஸ்தானில் இருந்து ஒட்டகங்களை தமிழ் நாட்டுக்கு இறக்குமதி செய்து, தங்கள் பக்தர்கள் மிகுதமாக இருக்கும் ஊர்களுக்கு ஒவ்வொன்றாக அனுப்பி, அவர்கள், தங்கள் ஊர்களில் அந்த ஒட்டகத்துக்கு இயக்கப் பெய்ன்ட் அடித்து தெருத் தெருவாக, கோவில் யானையை பிச்சை எடுக்க விட்டது போல் அலைய விட்டு, குர்பானி கொடுக்கும் முன்னாலேயே அதை அரை உயிராக்கி, எல்லாரும் முதல் நாள் குர்பானி கொடுப்பதால், நம்மை வேடிக்கை பார்க்க வர மாட்டார்கள் என்று, இரண்டாம் நாள் பலத்த கரகோசத்துக்கு மத்தியில் குர்பான் கொடுத்து, அந்தக் கறியை தெருத்தெருவாக அலைந்து எல்லாருக்கும் கட்டாயமாகச் சேர்க்க முயற்சித்து, வேண்டாம் என்று மறுத்தவர்களை அல்லாஹ்வுக்கு விரோதியாக்கி,....................
அப்பப்பா, கண் கொள்ளாக் காட்சி!
ஏனய்யா திடீரென்று ஒட்டகக் குர்பானி?
நல்லாத்தானய்யா போய்க்கிட்டிருந்திச்சி?
என்று கேட்டவர்களுக்கு கிடைத்த ரெடிமேட் பதில்: "நாங்க தமிழ்நாட்டிலே இயக்கம் ஆரம்பிச்ச பிறகுதான், அல்லாஹ் ஒட்டகக் குர்பானி கொடுக்கச் சொல்லியிருக்கிரதையும், இந்தியச் சட்டத்தில் அதற்கு இடம் இருப்பதையும், தமிழ் நாட்டில் அந்த பர்ளைப் பற்றி ஆலிம்சாக்கள் இது வரை மூடி மறைத்திருந்ததையும் தெரிஞ்சிக்கிட்டோம். எனவே அதுக்கும் உயிர் கொடுக்கத்தான் இந்த மாபெரும் புரட்சி" என்றார்கள்.
எனக்கு எழுந்த கேள்வி இதுதான்:
* இந்தியாவிலும் ஒட்டகக் குர்பானி அனுமதி இருக்கிறது. அது ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது எனும்போது சட்டத்தை உயிர்ப்பித்தல் எங்கே இருக்கிறது?
*சாப்பிடலாம் என்பது வேறு. சாப்பிட வேண்டும் என்பது வேறு. நியதிகளை எல்லாம் சட்டமாக்க முயல்வதை விடக் கொடூரமான பித் அத் வேறெதுவும் இல்லை.
*இஸ்மாஈலுக்கு (அலை) ப் பதிலாக ஆட்டை அன்பளித்த இறைவன் ஆடு மட்டுமே அறுக்க வேண்டும். பங்கிட வேண்டும். சாப்பிட வேண்டும் என்றல்லவா கட்டளை இட வேண்டும்? மாறாக, ஆடு, மாடு, ஒட்டகம் மூன்று இனத்தையும் சொல்ல வேண்டிய கட்டாயம் என்ன?
மனிதர்களை வித்தியாசமான நாடுகளில், வித்தியாசமான தட்ப, வெப்ப நிலைகளில் வாழ வைத்த இறைவன், ஆங்காங்குள்ள சூழ்நிலைகளில் வாழும் அனுமதிக்கப் பட்ட உயிர்களை சாப்பிட அனுமதித்தான்.
ஒன்றை யோசிப்போம். திருநெல்வேலி முஸ்லிம்கள் விரும்பிச் சாப்பிடுகிற செம்மறி ஆடு, ராமநாதபுரம் முஸ்லிம்களால் சாப்பிடப் படுவதில்லை. இன்னும் ஆடு சாப்பிடும் பெரும்பான்மை தமிழ் முஸ்லிம்களால் அதிலேயே பெண் ஆடுகள் சாப்பிடப் படுவதில்லை. மாடு தமிழ் முஸ்லிம்களில் பெரும்பான்மையோரால் சாப்பிடப் படுவதில்லை.........
இவ்வளவு விஷயங்கள் இருக்கும்போது, வன்முறையாக ஒட்டகக் குர்பானி ஏன்?
ஒட்டகம் சாப்பிடாத மக்களுக்கு மத்தியில் ஒட்டகக் குர்பானி என்று ஒரு நாள் கூத்து நடத்துபவர்கள் யாரைச் சீண்டுகிறார்கள்? மார்க்க கடமையை தீவிரவாதம் பண்ணி நிலை நாட்ட வேண்டிய அவசியம் என்ன?
யாரையாவது சீண்டி அதில் அற்ப மகிழ்ச்சி அடைவது இதுவரை காவித் தீவிரவாதிகளின் சொத்தாக இருந்தது. அது இடம் மாறி இருக்கிறதா?
தூய்மைவாதிகள்தான் பதில் சொல்ல வேண்டும்.

Thursday, November 4, 2010

சிவகாசி அஸ்மத் பாடல்கள் - 2

தோள் சுமக்கும் தோணியிலே
போகும் வரை தோழா!
திருந்திட உனைத் தடுக்கும்
தீமைஎன்ன தோழா!
புத்திமதி நோக்கமல்ல சிந்திக்கணும் தோழா!
பக்தி நெறி நீ நடந்தால் சஞ்சலங்கள் சூழா!
பக்தி நெறி நீ நடந்தால் சஞ்சலங்கள் சூழா
(தோள்)

மதுவை மாதை விரும்பாதே -பின்
மனதில் வாடி வருந்தாதே!
மறுமை உண்டு மறவாதே -அங்கு
மாதா உன் மனையாளும் உதவாதே!
அங்கு மாதா உன் மனையாளும் உதவாதே!
(தோள்)

பொய் புறம் பேசி நடமாடி -நீ
புண் மனத்தோருடன் உறவாடி
போக்கிய நேரம் பல கோடி -இன்று
பிணியோடு கரைந்தோடும் உயிர்நாடி.
இன்று பிணியோடு கரைந்தோடும் உயிர்நாடி!
(தோள்)

மதிக்கும் உந்தன் உறவோர்கள் -உன்னை
மண்ணில் மூடி வருவார்கள்
ஏதோ என்றோ நினைப்பார்கள் -துயர்
இருந்தாலும் சில நாளில் மறப்பார்கள்.
துயர் இருந்தாலும் சில நாளில் மறப்பார்கள்!
(தோள்)

தொழுதாயா? என்று கேட்கப்படும் -உந்தன்
தீமையின் ஏட்டைக் காட்டப்படும்.
நெருப்பின் சாட்டை நீட்டப்படும் -உன்னை
நெடுங்காலம் நரகத்திலே வாட்டப்படும்.
உன்னை நெடுங்காலம் நரகத்திலே வாட்டப்படும்!
(தோள்)

இறையின் கோபம் அறிவாயா? -அதை
அறிந்தால் தீமையில் விழுவாயா?
என் மொழி கேட்டுத் தெளிவாயா? -இதை
உணராமல் சக்ராத்தில் அழுவாயா?
இதை உணராமல் சக்ராத்தில் அழுவாயா?
(தோள்)

(சத்தியத்தின் சோதனைக்கு எத்தனையோ போட்டி - இசையில்)

Wednesday, November 3, 2010

ஆர்னிகா நாசர் - எந்திரன் கதை ஒரு விளக்கம்

ஆர்னிகா நாசர் 1985 களின் தமிழ் நாவல் ரசிகர்களுக்கு அறிமுகமான சயின்ஸ் பிக்ஸன் எழுத்தாளர்.

சுஜாதாவுக்கும் இவருக்கும் சயின்ஸ் பிக்ஸன் கதைகளில் உள்ள வித்தியாசம். சுஜாதா ஐ.டி சம்பந்தப்பட்ட ஜீனியஸ் என்பதால் கம்பியூட்டர் என்பதே தெரியாத காலத்தில் 1975 க்கு மேற்பட்ட ஆண்டுகளில் அந்த டெக்னாலஜியை தமிழனின் மூளைக்குள் திணிக்க எளிய வழியாக கதை எழுதும் உத்தியை பயன்படுத்தியவர். அவரின் கதைகளை இதை படித்தபின் மீண்டும் படியுங்கள். விளங்கும். ஏற்கனவே இருக்கும் கம்பியூட்டர் அதிசயங்களை புரியாதவனுக்கு புரிய வைத்தவர்.

ஆர்னிகா நாசர் அந்த நேரத்தில் சுஜாதாவை விட அட்வான்சாக 2020 களின் கம்பியூட்டர் எப்படி இருக்கும்? என்பதை அவர் கதைகளில் புகுத்தியதால் சுஜாதாவாலேயே நேரடியாகப் பாராட்டுப் பெற்றவர்.

அப்படி சிந்தித்து, எழுதி, வெளிவந்த மாலைமதியின் வெளியீடான "ரோபாட் தொழிற்சாலை" தான் இன்றைய இந்திரன் படக்கதை. மேற்கண்ட எழுத்துக்களை மீண்டும் படித்துப் பாருங்கள். ஒரு உண்மை விளங்கும். எந்திரனில் கூட "இந்த டெக்னாலஜி இன்னும் பத்து வருடத்துக்குப் பின் வேண்டுமானால் தேவைப் படலாம்" என்று நீதி மன்றம் கூறுவதை ஆதாரமாகக் கொள்ளலாம்.

நான் சினிமா ரசிகன் அல்லது எதிர்ப்பாளன் அல்ல. இன்றைய தமிழ் சினிமா ஆபாசக் களஞ்சியம் என்ற கருத்துக் கொண்டவன். சினிமாவைக் கண்டு பிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் இன்றிருந்தால் கோலிவுட், ஹாலிவுட், டோலிவுட், பாலிவுட் எல்லாமே ஆபாசத்தின் எல்லையையும் தாண்டிப் போவதைப் பார்த்து, ஜெலட்டின் குச்சியை ஆக்க சக்திக்காக கண்டு பிடித்த ஆல்பிரட் நோபிள், அது அழிவு சக்திக்கு பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டவுடன் நொந்து நூலாகி, அதற்கு வந்த ராயல்டியைக் கொண்டு நோபல் பரிசு கொடுக்கும் டிரஸ்ட் ஆரம்பித்தது போல் எதையாவது செய்திருப்பார்.
பாவம். இன்றைய ஆபாச சினிமாக் காரனும், அதற்கும் வக்காலத்து வாங்கி, கூத்தாடிகள் என்பதை கலைஞர்கள் என்று பாலிஷ் பண்ணிப் பேசும் மெத்தப் படித்தவர்களும் அவர் (தாமஸ் ஆல்வா எடிசன்) இறக்கும் வரை பிறக்கவில்லை.. இருந்தாலும் அவரின் கண்டுபிடிப்பையே திருடி இருப்பார்கள்.

அது மட்டுமல்ல, காப்பி ரைட் என்ற ஒரு விஷயம் எழுத்துலகிலும் சினிமா உலகிலும் அரசாங்கத்தால் கடுமையாக்கப் பட்டிருந்தும்,
எழுத்துலகில் மட்டும் அச்சட்டத்தை உயிரோடு விட்டு வைத்திருக்கிறார்கள்.
சினிமா உலகத்தில் ஒவ்வொரு படமும் மினி மாபியா கேங் உதவியுடன்தான் வெளி வருகிறது. என்ன, மினி பட்ஜெட் படம் மினி மாபியா என்றால், பெரிய பட்ஜெட் பெரிய மாபியா. அவ்வளவுதான். இதில் 300 கோடி இந்திரன் எனும்போது, ................ அப்பப்பா, தலை சுற்றுகிறது. இண்டர்நேசனல் பணக்காரர்களையும் மிஞ்சிய இந்த கூட்டத்திடம் ஆர்னிகாவுக்கு என்ன நீதி கிடைக்கும்? பொறுத்திருப்போம்.

ஆர்னிகாவுக்கும் எனக்கும் என்ன?

ஆர்னிகா இன்று தலை சிறந்த இஸ்லாமிய கதை நாவல் எழுத்தாளர். எங்கள் வட்டத்து நெருங்கிய நண்பர். அவர் வீட்டு திருமணத்தில்தான் ஜி. அசோகன், தினமலர் அந்துமணி, உள்ளிட்ட ஏராள பிரமுகர்களின் அறிமுகம் கிடைத்தது.
சமுதாய எழுத்தாளர் என்ற பாசத்தில்தான் இந்தப் பதிவு.

கடைசி செய்தி: தினமலர் அந்துமணி பற்றி.....ஒரே ஒரு கருத்து. அதுவும் அவரைப் பார்த்த பின், அவரைப் பற்றி ஆர்நிகாவிடம் கேட்ட பின் .......

பழனி பாபா சொல்வார்,
"என்னை ஆத்திரத்தோடு பார்க்காதீர்கள். என்னுடைய நல்லது உங்களுக்குத் தெரியாது.
என்னை அனுதாபத்தோடு பார்க்காதீர்கள். என்னுடைய கெட்டதுகள் உங்களுக்குத் தெரியாது"

அந்துமணியை நாம் பார்க்கிற பார்வைக்கும் இது பொருந்தும்.

Tuesday, November 2, 2010

இஸ்லாமிய திருமணம் ஒரு பார்வை (பகுதி 3 )

கே 23 : ஸஹாபாக்களுடைய திருமண முறையே நன்றாக இருக்கும் பொது எதற்க்காக நாயகம் (ஸல்) திருமணத்தை பகிரங்கப்படுத்த அனுமதித்தார்கள்?
ஸஹாபாக்கள் காலத்தில் திருமண பந்தத்திற்கென ஒரு மரியாதை இருந்தது. ரசூலுல்லாஹ் வாழ சொன்னபடி வாழ வேண்டும் என்கிற பக்தி இருந்தது. எனவே அன்றைய திருமண பந்தங்களுக்கான ஆயுட்காலமும் நீளமாக இருந்தது.
இன்றய திருமணங்களின் ஆயுள்,
உன்னைக் கண்டேன்
என்னை மறந்தேன்.
உன் தங்கையைக் கண்டேன்,
உன்னை மறந்தேன்.
என்கிற அலைபாயும் மன நிலையிலும்,
காலையில் அவர்கள் கண்கள் சந்தித்தன(காதல்)
மதியம் அவர்கள் கைகள் சந்தித்தன(திருமணம்)
மாலையில் அவர்கள் வக்கீல்கள் சந்தித்தார்கள் (விவாகரத்து)
என்கிற அவசர மனநிலையிலும் மனிதர்கள் மாறிப்போனதால், அப்படிப் போவார்கள் என நாயகம் (ஸல்) யூகித்ததாலேயே மிகப்பெரும் சாட்சியான அழைப்பை அவசியமாக்கினார்கள்.

கே 24 : திருமணத்தை பகிரங்கப் படுத்துங்கள் என்ற ஹதீஸ் திருமணத்தன்று போடப்படும் விருந்தை அவசியமாக்குமா?
ஆம். நிச்சயமாக.

கே 25 : இல்லையாமே? திருமணம் முடித்து முதல் இரவும் கழிந்தபின் மணமகன் கொடுக்க வேண்டிய வலீமா விருந்துதான் இஸ்லாமில் உள்ளது என்றும், மணமகள் வீட்டில் கொடுக்கும் விருந்து இஸ்லாமில் இல்லாதது என்றும் கூறி, சில நபர்கள் தங்கள் த்கிருமனத்தில் விருந்து கொடுக்காமல், "நாளை என் வீட்டில் வலீமா விருந்து உள்ளது" என அனுப்பி விடுகின்றனரே?
இது ஆரம்ப காலத்தில் சரியாக இருக்கலாம். ஆனால் எப்போது திருமண அழைப்பை ரசூலுல்லாஹி (ஸல்) ஆகுமாக்க்னார்களோ, அப்பொழுதே வந்தவர்களுக்கு உணவு ஏற்பாடும் செய்ய வேண்டும் என்பதை சாதாரண புத்தியுள்ளவன் கூட புரிய வேண்டும். விருந்தோம்பலை இஸ்லாமியரின் இயல்பாக பெருமானார் சொல்லித் தந்த பின் இந்தக் கேள்வியே அபத்தம்.
ஒரு சிலர் பெண் வீட்டில் நிபந்தனையிடும்போதே கல்யாணத்தன்று இத்தனை பேர் சாப்பிட வருவோம் என்று கூறுகின்றனர். இந்த நிபந்தனை வரதட்சணையில் சேர்த்தி. மாற்றமாக, உங்கள் சார்பில் எத்தனை பேர் வந்தாலும், வரவேற்கத் தயாராக இருக்கிறோம். சிரமமில்லை என்று பெண் வீட்டாரே சொன்னால் குற்றமில்லை.
ஏனெனில் திருமணம் பெண் வீட்டில் நடைபெறுவதால், அவர்கள் சார்பில் விருந்து வைப்பதை அவர்கள் விரும்பினால் மார்க்கம் தடுக்கவில்லை. மற்றபடி மாப்பிள்ளை வீட்டார் சாப்பாட்டுக்கு டிமாண்ட் செய்வதை மனிதாபிமானமல்ல என்பதை விட வேறு வார்த்தை சொல்ல முடியவில்லை.
இப்போதெல்லாம் ஒரே ஊர் மாப்பிள்ளை பெண்ணாக இருந்தால் கல்யாணத்தன்று தனித்தனியாக இருவர் வீட்டிலும் விருந்து நடைபெறுவதும், எல்லா சொந்தங்களும் இரு குடும்பத்துக்கும் பொது என்றால், இரண்டு நாட்கள் வைத்து இருவர் வீட்டிலும் சாப்பாடு நடைபெறுவதும் வாடிக்கையாகி விட்டது.
அது போன்றே வெவ்வேறு சொந்தங்கள் எனிலும் இருவரும் ஒரே இடத்தில் வைக்கும் விருந்துச் செலவை ஷேர் பண்ணிக் கொள்வதும் சகஜமாகி விட்ட பிறகு, இதை பெரிய பிரச்னையாக்கி மார்க்கத்தில் டென்ஷன் ஏற்ப்படுத்த வேணடியதில்லை.
இதற்கெல்லாம் மேலாக மறு வீட்டுச் சாப்பாடு என்ற பெயரில் முதலிரவு முடிந்த மறுநாள் நபிவழியின் அடிப்படையில் மாப்பிள்ளை வீட்டுச் சாப்பாடு இருப்பதை இந்த நூதனர்கள் சிந்திக்க மறந்து விடுகின்றனர்.

கே 26: திருமண மாப்பிள்ளை பெண்ணுக்கு, திருமணப்பெண் மாப்பிள்ளைக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது?
மாப்பிள்ளை பெண்ணுக்கு மஹர் கொடுக்க வேண்டும். பெண் அவளே புகுந்த வீட்டுக்கு தன்னையே அதிர்ஷ்டமாக கொண்டு போகும் பொது வேறெதுவும் தேவையில்லை. மாப்பிள்ளை எள்மையானவராக இருந்து, அவரின் நற் குனத்துக்காகவே பெண்ணை கொடுத்து மாப்பிள்ளைக்கான தனியிட வசதிக்கென பெண்ணை பெற்றவரோ வலீ (பொறுப்பாளர்) காரரோ சில ஏற்பாடுகளை, அன்பளிப்பு களை செய்தால் மறுக்க வேண்டியதில்லை.

கே 27 : இதற்கு முன்னுதாரணம் உண்டா?
ஆம். அன்னை ஆயிஷா நாயகியை ரசூலுல்லாஹி (ஸல்) திருமணம் செய்த பின் ஆயிஷாம்மா தகப்பனார் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில் பல நாள் கழிந்து ஒருநாள் அபூபக்கர் (ரலி) ரசூலுல்லாஹ்விடம்,"யா! ரசூலுல்லாஹ்! ஆயிஷாவை குடும்பம் நடத்த அழைத்துக் கொள்ளவில்லையா?" என வினவ,
"குடும்பம் நடத்தத் தேவையான பொருட்களை நான் பெற்றுக் கொள்ளாத நிலையில் எப்படி அழைத்துக் கொள்வது?" என நாயகம் (ஸல்) சொல்ல, அபூபக்கர் சித்திக் (ரழி) அவர்களே வீட்டிற்குத் தேவையான சில பொருட்களை தயார் செய்து தர, அதன் பிறகு, நபிகளாரின் இல்லறம் ஆயிஷா அம்மாவுடன் ஆரம்பமானது.
எனவே, மாப்பிள்ளைக்கு பணம் உட்பட எதுவும் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் பெண் வீட்டுக்கு இல்லை. ஆனால் அன்பின் அடிப்படையில் மாப்பிள்ளைக்கு கொடுக்கப்படுவதை மறுக்க வேண்டியதில்லை என்பதையே இதன் மூலம் பார்க்க வேண்டுமே தவிர, "அவர்களே வாங்கியிருக்கிறார்கள்" எனப் பேசுவதும் அறிவீனம்.
(இன்னும் இன்ஷா அல்லாஹ் 4 ம் பகுதியில்)

Monday, November 1, 2010

சிவகாசி அஸ்மத் பாடல்கள்

சிவகாசி அஸ்மத் ........ ! எண்பதுகளில் தமிழ்நாட்டு ஆன்மிக வானில் கோடி கட்டிப் பறந்த பெயர் மௌலானா மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ் அஸ்மத் ஹுசைன் மன்பஈ அவர்களை தெரியாதார் இருக்க முடியாது. தமிழ் முஸ்லிம்களின் மேடைகளின் அனைத்து வடிவங்களிலும் ஜொலித்தவர். 1985 க்குப் பின் கீழக்கரை கதீப் ஆகி தன் கடைசி நிமிடம் வரை மின்பருக்கு கம்பீரம் தந்தவர்.
சொல்ல மறந்து விட்டேனே!
ஒரே ஒரு வருடம் (1982) கயத்தாறில் எனக்கு ஹிப்ழ் உஸ்தாத். அந்த ஒரு வருடத்தில். என்னை எழுத்து, பேச்சு, கவிதை பாட்டு அனைத்திலும் உருவாக்கியவர். அன்னாரின் நினைவாக அவர்களின் பாடல்கள் சில.........!

(தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை... மெட்டில்)

என்னரும் பிழைகளை போக்கிடும் வல்லா
உன்னருள் வழங்கிட வேண்டுகிறேன்- நீ
இன்னருள் வழங்கிட வேண்டுகிறேன்.
உன்னருளே இந்த ஏழையை காக்கும்
உன்னிடமே இரு கைகளை ஏந்தும்.
(என்னரும்......)

பிழைகளை தினமும் திருத்திட நினைத்தேன்.
பின்னரும் இடறி தீமையில் விழுந்தேன்.
தொடருது துயரம் என்றுனை அழைத்தேன்.
தூய்மையில் சேர்க்கும் துணையென உணர்ந்தேன்.
தூய்மையில் சேர்க்கும் நல்ல துணையென உணர்ந்தேன்.
(என்னரும்.....)

இறைஞ்சிடும் இதயம் இன்புற வேண்டும்.
கரைந்திடும் உள்ளம் களிப்புற வேண்டும்.
நனைந்திடும் விழிகள் நிலைபெற வேண்டும்.
நல்லருள் நீயே தந்திடு இறைவா!
நல்லருள் நீயே இங்கு தந்திடு இறைவா!
(என்னரும்.....)

நினைவினில் வாழும் திருநபி பொருட்டு
நீங்கிட வேண்டும் தவறெனும் இருட்டு
ஏழை என் ஏட்டின் தீமையை திருத்து
என்னிரு பாதம் நேர்மையில் நிறுத்து.
என்னிரு பாதம் இங்கே நேர்மையில் நிறுத்து.
(என்னரும்.....)

உத்தமராம் அபூ பக்கருக்காக
உன்னத நீதி உமரினுக்காக,
உதுமான் அலீயின் உயர்வினுக்காக,
உன்னருள் வேண்டும் என்னுயிர் காக்க
உன்னருள் வேண்டும் இங்கே என்னுயிர் காக்க.
(என்னரும்....)

அருந்தவ நபியின் பேரர்களான
ஹசனின் ஹுசைனின் தியாகத்துக்காக,
வளம் நிறை கவ்துள் அ" லமுக்காக
வழங்கிடு அருளை நீ எனக்காக.
வழங்கிடு அருளை இங்கு நீ எனக்காக.
(என்னரும்.....)

என் மனம் துயரில் நீந்திடக் கூடும்
ஏந்திய கைகள் சோர்ந்திடக் கூடும்
முன்னவன் நீயே என்னவன் நீயே
முறையுடன் இறைஞ்சும் நெஞ்சம் தந்தாயே!
முறையுடன் இறைஞ்சும் நல்ல நெஞ்சம் தந்தாயே!
(என்னரும்....)

Saturday, October 30, 2010

"ஜம் ஜம்" நீர் தாய்மையின் சின்னம்!!!

ஐயாயிரம் (தோராயமாக) ஆண்டுகளுக்கு முன்....
பாரான் பள்ளத்தாக்கு எனப்படும் இன்றைய புனித மக்கா இருக்கும் பகுதியில் ஆள் அரவமற்ற நிலையில் கணவர் இப்ராஹீம் நபியால் விட்டுச்செல்லப்பட்ட ஒரு தாயும் மகனும்.
மகன் தாகத்திற்கு அழுகிறார். பச்சைக் குழந்தை அழுகுரல் எந்தத் தாயையும் பைத்தியமாக்கி விடும்தானே? சுற்று முற்றும் பார்க்கிறார்.
அதோ சபா மலைக் குன்றில் தண்ணீர் இருப்பது போல் தோற்றம்.
ஓடுகிறார்.
அது கானல் நீர்.
பக்கம் செல்லச்செல்ல அத்தண்ணீர் பார்வையில் இருந்து மறைய, மீண்டும் குழந்தையின் அழுகுரல் தாளாமல் மர்வா மலைக்குன்றை நோக்க, அங்கும் அதே கானல் காட்சி.
ஓடுகிறார்.
இல்லை.
மீண்டும் சபா. மீண்டும் மர்வா.
மொத்தம் ஏழு முறைகள்.
இதில் என்ன கொடுமை எனில் அந்த தள்ளாத வயதுக் கிழவி நடந்த போது அங்கே, நிழல் இல்லை. வெயிலோ உச்சத்தில். இரண்டு குன்றுகளுக்கும் இடையே, குழந்தையை பார்த்துக் கொண்டே நடக்கிறார். ஒரு நீண்ட பள்ளம் குறுக்கிடுகிறது. மேட்டில் இருக்கும் பிள்ளையை சீக்கிரம் காணும் ஆவலில் வயதை மீறி தள்ளாடித் தள்ளாடி ஓடுகிறார்.

ஏழு முறைகளிலும் இதே திரும்பத் திரும்ப. கொஞ்சம் யோசியுங்கள். உங்கள் அம்மாவும் உங்களின் மூன்று வயதுக்குள் இதே வடிவம்தான். பிள்ளை பெற்ற அம்மாமார்களை நீங்கள் கணவர்களாக இருந்தாலும், கவனித்ததுண்டா? பிள்ளை நடு நிசியில் அழுதால், எரிச்சல் பட்டு நீங்கள் கண்ணைத் திறக்கும் முன்பே பெற்றவள் உட்கார்ந்து அதை அமைதிப் படுத்துவதையோ, தொட்டில் ஆடிக் கொண்டிருப்பதையோ நீங்கள் காணலாம். பிள்ளைக்கு உடல் நிலை சரியில்லை எனில், அது சரியாகும் வரை, கடன் உடன் வாங்கியாவது குணப்படுத்தும் வரை உங்கள் மனைவி ஓய்வேடுத்ததுண்டா?

உங்களின் ஏழு கழுதை வயதில் காணும் இந்த மனைவிக்காக நீங்கள் பரிதாபப் பட்டதுண்டா? ஆம் எனில் நீங்கள் உங்கள் சிறு வயதில் இப்படித்தான் உங்கள் தாயை கஷ்டப் படுத்தி இருப்பீர்கள் நினைவில் கொண்டு வந்து, அவரையும் இரக்கக் கண்ணோடு நோக்குங்கள்.
கண்ணால் காணும் மனைவிக்கே . பரிதாபப் படாதவரா நீங்கள்? உங்களை ரோபாட் ஐ விட மோசமானவாக நான் மதிக்கிறேன்.

மீண்டும் வாருங்கள்.
அந்தத் தாய் ஹாஜிராவின் தள்ளாத வயது தியாகம் இறைவனால் மதிக்கப் பட்டது. அதனால்,
  • ஜம் ஜம் நீர் குழந்தைக்கும் தாய்க்குமாய் ஊற்றெடுக்கச் செய்தான்.
  • ஹஜ்ஜுச் செய்யும் பொது ஆணுக்கும் பெண்ணுக்கும் அந்த எழு ஓட்டத்தை (சயி) கடமை ஆக்கினான்.
  • அந்த ஏழு ஓட்டங்களிலும் ஆண்களுக்கு மட்டும் அந்த தாய் (ஹாஜிரா) பள்ளத்தில் ஓடிய இரண்டு மைல் பச்சை அடையாளம் இட்ட இடத்தில் கிழவி போலவே குலுங்கி குலுங்கி ஓடச் சொன்னான்.
காரணம் பெண்கள் பிள்ளை சுமப்பவர்கள். அவர்களுக்கு தாய்மை வலியை உணர்த்த வேண்டியதில்லை. ஆண்கள் மனைவிக்காக, சுகத்துக்காக, பொருளாதாரத்தை மிச்சப்படுத்த இப்படி பல காரணங்களால் தாயைப் புறக்கணிக்கிறார்கள். சபா மர்வா தொங்கோட்டம் ஆண்களுக்கு (சில பெண்களுக்கும்) தாய்மையை உணர்த்தும் பாடம். உங்களில் யாராவது ஹஜ் செய்தவர் அல்லது செய்த பெண் அம்மாவைப் புறக்கணிக்கிறார் என்றால் இது உறுதி,
அவர் ஹஜ் செய்யவில்லை. பிக்னிக் போய் வந்திருக்கிறார்.

Wednesday, October 27, 2010

என்ன பாவம் செய்தார்கள் முஸ்லிம்கள் ?

உச்ச நீதி மன்றத்துக்கு ஜனாதிபதி ஒரு விஷயத்தில் தீர்ப்பளிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பிரச்னை என்னவென்றால், பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில் அதற்கு முன்னர் இந்துக் கோவிலோ அல்லது வேறு ஏதாவது கட்டிடமோ இருந்ததா?
அந்தப் பிரச்சினையை 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரித்தது. அந்த நீதிபதிகளில் நானும் ஒருவன். அந்தப் பிரச்சினை பற்றி இப்போது பேசி புதைக்கப் பட்ட பழைய விஷயங்களை மீண்டும் வெளிக்கொணர வேண்டாம்.
அதற்கு முன் சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தை மத்திய அரசு கைப்பற்றுவது குறித்தும், அங்கே பார்த்தவர்கள் கரசேவகர்கள் பூஜை செய்வது குறித்தும் எழுந்த ஒரு பிரச்சினை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் m n வெங்கடாசலய்யா மற்றும் v n ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மீது விசாரணைக்கு வந்தது.
அப்போது அட்டர்னி ஜெனரல் மீலன் பானர்ஜி வாதிடும் போது "தனக்கு கரசேவகர்கள் பாப்ரி மஸ்ஜிதை இடிக்கப் போவதாக உறுதியான தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், எனவே கரசேவகர்களை சர்ச்சைக்குரிய இடத்தில் பூஜைக்கு அனுமதிக்கக்கூடாது என்று வாதிட்டார்.
ஆனால் அதை, அவரது வாதத்தை உதாசீனம் செய்த உச்சநீதிமன்றம், கரசேவகர்கள் கூடுவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்திருக்காவிட்டால் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது தடுக்கப்பட்டிருக்கும்.
உத்திரப் பிரதேச முதல்வர் கல்யான்சிங்கிற்கு ஒரு நாள் சிறை தண்டனை அளித்தது சரியாக ஆகாது.
“தற்போது அலஹாபாத் உயர்நீதிமன்றம் அயோத்தியின் உரிமை வழக்கில் அளித்திருக்கும் தீர்ப்பை படித்து அதிர்ச்சியடைந்தேன். அது ஒரு தீர்ப்பா என்பதிலேயே சந்தேகம் இருக்கிறது”.
சட்டத்தின் ஆளுமை மக்களாட்சி தத்துவம் மற்றும் அரசியல் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக உள்ளது.
-இது சமீபத்தில் டெல்லியில் நடந்த, "அலஹாபாத் உயர் நீதி மன்ற தீர்ப்பு" சம்பந்தமாக ஒரு கருத்தரங்கில் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ, எம். அஹமதி தெரிவித்த கருத்து.

மேற்க்கண்ட செய்தியில் சாதாரண பாமரன், எனக்குத் தெரியும் உண்மைகள்:
  • பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் உண்மையான விபரங்கள் அறிவார்ந்த நீதிபதிகளால் தெரிவிக்கப் பட்டவை சுத்தமாக புதைக்கப் பட்டிருக்கிறது.
  • காவி மனப்பான்மை நீதிபதிகளால் தீர்ப்பு கொடுக்கப்படும் பொது, அது நீதிக்கு எதிரானது என்று தெரிந்து, அதனால் பொது மக்கள் கொந்தளித்து விடக்கூடாது என்று, அவர்களின் கைகளைக் கட்டிப்போட சர்வாதிகார அரசாங்கத்தை விடக் கொடுமையாக போலிஸ் ராணுவம் என ஏவி, கடுமையான அடக்கு முறைகளைக் கையாண்டு அதை நசுக்க முனைவதும், அதுவே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் ஆளுபவர்களின் (அது காங்கிரஸ் ஆயினும்) காவி முகமூடியை வெளிக்காட்டுவதும் தொடராக நடந்து வருவதை மேற்கண்ட பேச்சு ஞாபகப் படுத்துகிறது.
  • தடா, போடா என்ற பெயரிலான முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறை சட்டங்களுக்கு, ஒரு ஸ்கெட்ச் பேனா, ஹிந்துக்களுக்கு எதிரான ஒரு போஸ்டர், ஒரே ஒரு ஜெலட்டின் குச்சி இவைகளை போலிஸ் காரர்களையே வைத்து ஏற்பாடு செய்து, முஸ்லிம்களில் கைதுக்குரியவர்கள் லிஸ்ட் தயார் செய்து, அவர்களை நாடு இரவில் எழுப்பி, அவர்கள் தூக்கக் கலக்கத்தில் இருக்கும் நிலையில் கைகளில் திணித்து, அன்றிலிருந்து நீங்கா சிறைவாசத்தில் அவர்களை சிக்க வைத்து அராஜகம நடத்தும் நீதி, மாநில அரசு கையில் இருக்கும் திமிரில் பாப்ரி மஸ்ஜிதை இடிக்க எல்லா உதவிகளையும் செய்த கல்யான்சிங் கிற்கு ஒரு நாள் சிறை என்ற காமெடித் தீர்ப்பும் வழங்கிய கொடுமையும் தெளிவாகிறது
  • ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? என்று, ஹிந்துக்கள் நம்பியவன் ஏமாற்றும் போது நொந்து பொய் சொல்வது வழக்கம். அந்த ராமன் விஷயத்தில் கற்பனை ஜென்ம பூமிக்காக, இந்தியாவை தாய் நாடாகக் கொண்ட நாட்டுப் பற்று மிக்க முஸ்லிம்கள் இப்படி நொந்து கொள்கிறார்கள், " காங்கிரஸ் ஆண்டால் என்ன? பி.ஜே.பி ஆண்டால் என்ன? இஸ்லாமியர் இரண்டாம் தரக் குடிமக்கள்தானே?"
  •  உச்ச நீதிமன்ற நீதிபதிக்கே அலஹாபாத் தீர்ப்பு அதிர்ச்சி என்றால், நமக்கு.....?

Tuesday, October 26, 2010

இஸ்லாமியத் திருமணம் ஒரு பார்வை (பகுதி-2)

கே 14 : அறியாமை கால இரண்டாம் வகை திருமணம் எப்படிப் பட்டது?
இது பெண்ணின் சாய்ஸ். ஒரு பெண் பல பேரிடம் தப்பாக நடப்பாள். தனக்கு ஒரு துணை போதும் என்ற நினைப்பு வரும் போது, அவர்கள் அனைவரையும் பஞ்சாயத்திற்கு அழைத்து, பொது மக்களுக்கு முன், "இவன் தான் என் வயிற்றுக் குழந்தைக்கு தகப்பன்" என்பாள். எல்லோரும் சேர்த்து (ஆவலுடன் தப்பாக நடந்தவர்களும் சேர்த்து (அப்பாடா! தலை தப்பித்தது!) ) அவனுடன் அவனை இணைத்து விடுவர்.

கே 15 : இதில் மற்றவர்கள் வெட்கப்பட மாட்டார்களா?
ஊரே அந்த மனநிலையில் இருக்கும்போது வெட்கப்பட என்ன இருக்கிறது? நம்முடைய காலத்தவர்கள் வாடகைத் தாய்மையை, சினிமாக்களிலும் சீரியல்களிலும், டாக்டர்களின் டாக் ஷோக்களிலும் சத்தம் போட்டு நியாயப் படுத்தவில்லையா? யார் வெட்கப் பட்டார்கள்? அது மாதிரிதான் இதுவும்.

கே 16 : இந்த வகை திருமணம் இப்போது நடைபெறுகிறதா?
பெரும்பாலும் அடங்காமல் நடக்கும் பெண்கள், (அந்த பலகீனத்தை பயன்படுத்தி அவர்களை ஏமாற்றி சீரழிக்கும் ஆண்களுடன் தப்பாக நடந்து) என்றாவது கையும் களவுமாக மாட்டிக் கொள்ளும்போது. அதற்கு முன் அவளுடன் இருந்தவர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கடைசியாக மாட்டியவனுடன் சில பஞ்சாயத்துக்களே அவளை சேர்த்து வைத்து விடுகின்றன.

கே 17 : அடுத்த வகை திருமணம் எப்படிப் பட்டது?
அதே போன்று பல பேரிடம் தவறாக நடக்கும் பெண், குழந்தை உருவாக்கி அதை பெற்றெடுத்தப் பின் தன்னிடம் தவறாக நடந்தவர்களையும், சாமுத்திரிகா லட்சணம் என்னும் ஜாடை அடையாளம் சரி காணும் நபரையும் அழைப்பாள்.
அவனிடம் அந்த ஆண்களை காட்டி, இவனில் யாருக்கு இக்குழந்தை பிறந்துள்ளது? என கேட்டு, அவன் கை காட்டும் நபரை மற்றவர்கள் துணையுடன் திருமணம் செய்து கொள்வாள்.

கே 18 : இத்திருமண முறை இப்போது நடைபெறுகிறதா?
ஆம். பழங்குடியினர் என்று அழைக்கப்படும் ஆதிவாசிகளில் சிலரிடம் சமுதாய அமைப்பிலேயே இப்படி நடைபெறுவதாக செய்திகள் சொல்கின்றன.

கே 19 : மேற்கண்ட மூன்று முறைகளில் திருமணம் செய்தவர்களிலும் நல்லவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?
எப்படி இருக்க முடியும்? “விபச்சாரி, விபச்ச்சரகனைத் தவிர மற்றவர்களை திருமணம் செய்ய மாட்டாள். இது போலவே ஒரு விபச்சாரகன் விபச்சாரியைத் தவிர மற்றவர்களை திருமணம் செய்ய மாட்டான்” என அல்லாஹ்வே குர் ஆனில் தெளிவாக்கிய பிறகு, எப்படி அவர்களில் நல்லவர் இருக்க முடியும்?

கே 20 : நான்காவது வகைத் திருமணம் எப்படிப்பட்டது?
அது இப்போதைய திருமணம் போன்ற ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளையையோ, ஒரு மாப்பிள்ளைக்கு பெண்ணையோ பேசி,, இரு வீட்டாரும் கலந்து செய்யும் திருமணங்களும் வழக்கத்தில் இருந்தன. இஸ்லாமிய நெறியுடன் பின்னாளில் தங்களை இணைத்துக்கொண்ட அனைத்து தோழர்களின் திருமணங்களும், இஸ்லாம் வருவதற்கு முன்பே அப்படித்தான் நடந்திருந்தன. நபிகள் நாயகத்தின் முதாதையர் அத்துனைப் பேரின் திருமணங்களும் இப்படித்தான் நடந்திருந்தன.

கே 21 : இஸ்லாமியத் திருமணத்திற்கு தேவையானவை என்னென்ன?
மாப்பிள்ளை, பெண், பெண்ணின் பொறுப்பாளர் பெண்ணின் தகப்பனார் அல்லது சகோதர்கள் (இவர்களில் யாரும் உயிருடன் இல்லையெனில் அப்பெண்ணின் போஷகர்) இரண்டு சாட்சிகள், நடத்தி வைப்பவர் (காழீ) பெண்ணின் பொறுப்பாளர் விபரமானவராக இருப்பின் இப்பொறுப்புக்கு அவரே போதும். இக்காலத்தில் திருமண வாழ்க்கையின் நீளம் கம்மியாகிக்கொண்டே வருவதால் காழீ (நடத்தி வைப்பவர் அவசியமாகிறார்

கே 22 : இதற்கு முன்னுதாரணம் உண்டா?
ஆம். ஆரம்பத்தில் சஹாபாக்களின் திருமணங்கள் கூட நாலாம் பேருக்குத் தெரியாமல் நடந்ததுதான். இன்னொருவருக்கு பெண் பேச அனுப்பி வைக்கப்பட்டவரே, வீட்டுக்குள்ளிருந்து மாப்பிள்ளையாகத் திரும்பி வந்து முதலில் பெண் பேசப்பட்டவரிடம் வாழ்த்துப் பெற்ற சம்பவங்களும் உண்டு.
இரவில் திருமணம் முடித்து பகலில் ரசுலுல்லாஹ்விடம் அதை செய்தியாகத் தெரிவித்த சஹாபிகளும் உண்டு. பின்னாளில்தான் திருமணத்திற்க்காக அழைப்பு விடுத்துக் கொள்ளுங்கள். தப் அடித்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் திருமண சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள அனுமதித்தார்கள்.
(இந்தப் பகுதி என் மகள் பாத்திமா புஷ்ரா டைப் செய்தது)
....................... இனி இன்ஷா அல்லாஹ் 3 ம் பகுதியில்

Saturday, October 23, 2010

இஸ்லாமியத் திருமணம் ஒரு பார்வை (பகுதி-1)

கே 1 : திருமணத்தின் நோக்கம் என்ன?
கற்பு நெறி காத்தல், இனவிருத்தியை ஆகுமான முறையில் நடத்துதல், சிறந்த சமுதாயம் உருவாக்குதல்.

கே 2 : இந்த நோக்கம் மனிதனுக்கு மட்டுமா?
ஆம். காரணம் மிருகங்களில் இனச்சேர்க்கை இயல்பானது. திட்டமிட்டதல்ல. முழுக்க முழுக்க இனவிருத்தி மட்டுமே நோக்கமாகக் கொண்டது.

கே 3 : திருமணம் என்ன மாற்றம் தருகிறது? (அல்லது) தர வேண்டும்?
திருமணம் பார்வையைத் தாழ்த்துகிறது. இன உறுப்புக்களை வரம்பு மீறாது பாதுகாக்கிறது.

கே 4 : திருமணம் செய்யாவிட்டால் (அல்லது) செய்து வைக்காவிட்டால்?
திருமண வயது வந்தப் பின் தன்னுடைய ஆண் அல்லது பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்காத பெற்றோருக்கு அப்பிள்ளைகள் வரம்பு மீறினால் ஏற்படும் தண்டனையில் முக்கிய பங்குண்டு.

கே 5 : உலகியல் திருமணம் எந்தெந்த காரணங்களுக்காக செய்யப் படுகிறது?
பணம், குடும்ப பெருமை, அழகு, (அதாவது மார்க்க பக்தி இவைகளின் கடைசி அம்சமாக்கியே உலகியல் திருமணம் நடை பெறுகிறது.)

கே 6 : இஸ்லாமியத் திருமணம் எதை பிரதானப்படுத்த வேண்டும்?
மார்க்க பக்தியுள்ள துணை அமைவதையே பிரதானப்படுத்த வேண்டும்.

கே 7 : அப்படியானால் மேற்கண்ட மூன்று விஷயங்களுக்காகவே திருமணம் செய்வதால் என்ன விளையும்?
பணத்துக்காக ஒரு பெண்ணை அல்லது மாப்பிள்ளையை முடித்தால், பணம் கரையும் வரை மட்டுமே குடும்ப பந்தம் அமைதியாக இருக்கும். பணம் இல்லையெனில் தைரியமாக முரண்பாடுகள் பேசப்படும். குடும்ப பெருமைக்காக மட்டும் திருமண செய்யப்பட்டால் ஏதேனும் விரும்பத்தகாத குற்ற நிகழ்வு அக்குடும்பத்தில் நிகழ்ந்தால் குடும்ப மரியாதை இழந்து மணபந்தம் முறியும் சூழல் எற்படலாம்.
அழகுக்காக திருமணம் நடைபெறும்போது, காலம் மாற மாற அழகின் டிகிரியும் மாறும் பேது, சலனங்கள் அக்குடும்பத்தில் சஞ்சலங்கள் ஏற்படுத்தலாம். ஆனால் மார்க்க பக்திக்காக திருமணத்தை பிரதானப்படுத்தினால் அதுவே நல்ல குடும்பப் பாரம்பரியத்தையும், முக வசீகரத்தையும், போதும் என்கிற மன செழுமையையும் தரும். எதை இழந்தாலும் இறைவன் நாட்டம் என ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். பணம் கரையும் வரை மட்டுமே குடும்ப பந்தம் அமைதியாக இருக்கும். பணம் இல்லையெனில் தைரியமாக முரண்பாடுகள் பேசப்படும். குடும்ப பெருமைக்காக மட்டும் திருமண செய்யப்பட்டால் ஏதேனும் விரும்பத்தகாத குற்ற நிகழ்வு அக்குடும்பத்தில் நிகழ்ந்தால் குடும்ப மரியாதை இழந்து மனபந்தம் முறியும் சூழல் எற்படலாம்.

கே 8 : நபிகளார் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் முன் திருமணங்கள் எந்த அடிப்படையில் நடந்தன?
நான்கு வகையான திருமணங்கள் நடந்தன. முதல் வகை ஒரு பெண்ணை திருமணம் முடித்தவன், முதலிரவில் தன மனைவியை ஊரிலேயே பலசாலியான ஒருவனின் படுக்கைக்கு அனுப்பி வைப்பான். அவன் அனுபவித்தப்பின் தன்னோடு சேர்த்துக் கொள்வான். காரணம், சண்டை போடும் பரம்பரைக்குணம் போய்விடக்கூடாது என்பதற்காகவும், பலசாலியான வாரிசு வேண்டும் (அறிவில்லாவிட்டாலும் கூட) என்ற மனப்பான்மையினாலும் தான்

கே 9 : இப்போது இந்த வகை திருமணத்திற்கு உதாரணம் உண்டா?
ஆம். சில நவீன நாகரிகம் பேசுவோர், தன கணவன் உயிரணுக்கள் செத்த பிரவியாயிருக்கின்றன என்று, எப்படியாவது குழந்தை உருவாக யாரோ ஒரு மனிதனின் சேமிக்கப்பட்ட விந்தணுக்களை தன கர்ப்பபைக்குள் செலுத்திக் கொண்டு குழந்தை பெருகின்றனரே அது.

கே 10 : இது இஸ்லாத்தில் ஆகுமா?
ஆகாதல்லவா? பச்சை விபசாரமாயிற்றே?!

கே 11 : விஞ்ஞானத்தால் முடியும் என நிரூபிக்கப்பட்டிருப்பதை நாம் மறுக்க முடியுமா?
மறுக்க முடியாது. அதற்காக ஏற்க முடியாதே.

கே 12 : அப்படியானால் எதை ஏற்கலாம்?
கணவனின் உயிரணுக்களை ஊசி மூலம் எடுத்து அவன் மனைவிக்கே செலுத்தி குழந்தை பெற வைக்கும் முறையை ஏற்கலாம் ஏனெனில் உறவு கொள்வதால் உயிருக்கு ஆபத்து என பயந்தால் அல்லது உயிரணுக்கள் பலமாய் உள்ள கணவன் உறவு கோள்ளும் போது உயிரணுக்கள் நீர்த்துப் போய் விடுவதை பயந்தால் ஒரு வேளை கூடலாம்.
ஆனால் கணவனின் உயிரணுக்கள் ஊசியில் சேமிக்கப்பட அவன் கிளர்ச்சி அடைய வேண்டும். அப்போதுதான் விந்தணுக்கள் சேமிப்பது சாத்தியம் என்றால் அதற்க்கு மனைவியுடனான உறவே பெட்டர். ஊசி மூலம் செலுத்தும் முறை ஆகாது. (ஐயோ! தலையே வெடித்து விடுகிறது) மொத்தத்தில் இறை நெறி ஒழுக்கத்திற்கு மாற்றமான எதுவும் ஹராம்தான்.

கே 13 : வாடகைத் தாய்மையை ஏற்கலாமா?
அதாவது ஒரு கணவனின் விந்தணுக்களையும் அவன் மனைவியின் கரு முட்டைகளையும் அந்த மனைவின் கர்ப்பப்பை குழந்தை சுமக்க முடியாத பலவீன நிலையிலுள்ளது என்பதற்காக பலமான கர்ப்பப்பை உள்ள பெண்ணுக்குள் செலுத்தி அவளை சுமக்கச் செய்து குழந்தை பெற வைப்பது, இதை விஞ்ஞான வளர்ச்சி என்பதை விட, விபச்சாரத்தின் வளர்ச்சி எனலாம். காரணம், கர்ப்பத்தில் சுமக்கும் பெண்ணின் அத்தனை குணங்களையும் தன வடிவாகப் பெரும் அக்குழந்தை எப்படி அந்த பிள்ளையில்லாத தாயின் பிள்ளையாகும்? வேண்டுமானால் உயிரணு கொடுத்த கணவனின் வைப்பாட்டியின் (வாடகைத் தாயின்) பிள்ளை என்று சொல்லலாமா?
இதற்கு அந்த வாடகைத் தாயையே திருமணம் செய்து குழந்தை பெறலாமே? விபரீதம் என்னவென்றால், ஒரு திருமணத்திற்கு மேல் செய்யாமல் இருப்பவனும் உத்தமனாம். இப்படி வாடகைத் தாய்மைக்காக தன உயிரணுக்களை இரண்டாவது மற்றும் மூன்றாவது பெண்ணுக்குள் விஞ்ஞானத்தின் பெயரால் செலுத்துபவனும் உத்தமனாம்!
தன் கர்ப்பப்பையை பல பேருக்கு வாடகைக்கு விடுபவள் பத்தினியாம். ஆனால் பல பேருடன் உறவு கொள்பவள் விபச்சாரியாம்! (என்ன! தலை சுற்றுகிறதா? ) இதுதான் இறை நெறிக்கு மாறான விஞ்ஞான வளர்ச்சி.

(இன்னும் ....... 2 ம் பகுதியில்)

Thursday, September 23, 2010

Pillars of Islam

Ibn Umar, may Allah be pleased with him, relates that the Holy Prophet, peace and blessings of Allah be upon him, said: “Islam is based on five articles:

1. To bear witness that there is none worthy of worship save Allah and that Muhammad (peace and blessings of Allah be upon him) is the Messenger of Allah.
2. To observe Prayer (Salat).
3. To Pay Zakat (Alms giving)
4. To perform the Pilgrimage to the House of Allah (Hajj).
5. To Observe fasting during Ramadhan.” (Bukhari)

Abdullah ibn Amr bin Aas, may Allah be pleased with them, relates that the Holy Prophet, peace and blessings of Allah be upon him, said:

“A Muslim is one against whose tongue and hands other Muslims are secure, and an Emigrant is one who departs from what Allah has forbidden.” (Bukhari)