Thursday, September 29, 2016

வானம் அண்ணாந்து பார்த்த வள்ளல் நபி

மீண்டும் ஒரு மிஃராஜின் நினைவு. மக்கள் தொடர்பு சாதனங்கள் இரண்டு வகை உண்டு. ஒன்று எழுத்து மற்றும் ஒலி வடிவிலானது. இரண்டாவது ஒளி (காணொளி) வகையிலானது. இஸ்லாம் தத்தித் தவழ்ந்த துவக்க காலத்தில் முந்தைய வேதங்கள் அறிந்த பண்டிதர்களால் எழுத்து வடிவிலான ஆவணங்கள் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) பரிகசிக்கப்பட்டதுண்டு. அவ்வப்போது அத்ற்கான பதிலடிகளும் குர் ஆன் மூலம் இறங்கியதுண்டு. எல்லாமே சம்பவங்களின் அடிப்படை. (முந்தைய வரலாறுகள் காட்டி, “உம்மிடம் அப்படி ஏதேனும் உண்டா? எனக் கேட்கப்படும்போது, அந்த வரலாற்றையும் அதில் அவர்கள் மறைத்து சுயலாபம் பார்த்தவைகளும் சொல்லி அவர்களின் மூக்கறுக்கப்பட்டதுண்டு)
ஆனால் உலகம் சிறியது. இது போன்ற லட்சக் கணக்காண மடங்கு பெரியது அல்லாஹ்வின் இராஜ்ஜியம் என்பதை குர் ஆன் சொன்னபோது, எட்டிய தூரம் வரை மட்டுமே உலகம் என நம்பிக்கொண்டிருந்த மக்களுக்கு அந்த எட்டாத தூரத்தையும் காட்டித்தர அல்லாஹ் செய்த ஏற்பாடுதான் மிஃராஜ் என்ற உயிர் உடலுடன் கூடிய விஷுவல் அனுபவம்.
தத்துவத்தை மட்டும் சொல்லி இஸ்லாம் வளர்ந்திருக்க முடியாது என்பதற்கு மிஃராஜ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மரணத்திற்குப்பின் தான்  நிஜ வாழ்க்கை. அங்கு விசாரணை உண்டு. சொர்க்கம் உண்டு. அதில் சுகந்தம் உண்டு. நரகம் உண்டு. அங்கு நாராசம் உண்டு என்பதை வெறும் தத்துவமாக அன்றி, தரமான நிரூபணமாகவே மிஃராஜின் மூலம் காட்டினான் அல்லாஹ்.

இந்த மிஃராஜ் அந்த மறு உலகின் தன்மைகளை திரும்பத் திரும்ப கேட்கும் நமக்குள் விதைக்கட்டும். நல்லறிவு மலரட்டும். இன்ஷா அல்லாஹ். 

ரீ சைக்கிள் பின் (recycle bin)

உலகத்தின் புலம்பல் உங்கள் காதுகளில் விழுகிறதா? தெருவாசிகள் தெருக்குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாக நகராட்சியிடம் சண்டை போடுகிறார்கள். ஊர்க் குப்பைகள் மொத்தமாக எங்கே கொண்டு கொட்டுவது? நகராட்சிக்குப் பிரச்னை. ஒவ்வொரு மாநிலமும் இன்னொரு மாநிலத்திலிருந்து தனக்கே தெரியாமல் தன் நிலத்தில் கொட்டப்படும் மருந்துக்கழிவுகளை, கோழிக்கழிவுகளை கொட்ட விடாமல் தடுப்பது எப்படி? அன்றாட மக்கள் பயன்பாட்டுச் சாதனங்கள் போக மின்னணுக்கழிவுகள் எனப்படும் கம்பியூட்டர் கழிவுகளை என்ன செய்வது? இங்கு மட்டுமல்ல, வானத்தில் ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக்கொண்டு ஏவிய விண்கலங்கள் (சாட்டிலைட்டுகள்) செயலிழந்த பின் முத்ல் வானத்திலேயே குப்பைகளாய்க் கொட்டிக் கிடக்கிறதே? அதை என்ன செய்வது?
சின்னச்சின்னப் பிரச்னைகளை பெரிதாக்கிப் பேசும் அரசியல்வாதிகள் மெகா பிரச்னைகள் மக்களுக்குத் தெரிந்து விடாமல் சர்வ ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்கிறார்கள். ஏனென்றால், அந்த மெகாப் பிரச்னைகள் தங்கள் நாற்காலியையே ஆட்டம் காணச் செய்து விடும் என்ற பயம்தான்.
1984 டிசம்பர் 2 ஆம் தேதி காலையில் விழிப்போம் என்ற நம்பிக்கையுடன் தூங்கிய போபால் மக்களில் நிறையப்பேரை மீளா உறக்கத்தில் ஆழ்த்தியும், நிறையப்பேரை முடமாக்கியும் கோரத்தாண்டவம் ஆடிய விஷவாயுக்கழிவுகள் முப்பது ஆண்டுகளாகியும் இன்னும் அகற்றப்படவில்லை. ஜெர்மன் நிறுவனம் ஒன்று நாங்கள் சுத்தப்படுத்துகிறோம் என்று கிளம்பி வந்தது. ஆனால் அதனால் ஏற்படும் விளைவுகளை நேரில் ஆய்வு செய்ததும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடியது. இன்றும் பிறக்கிற குழந்தைகளை ஊனமாக்கியே பிறக்க வைக்கும் கொடூரம் கொண்ட விஷவாயுக்கசிவைப்பற்றி டிசம்பர் 2 ஆம் தேதி கூட யாரும் பார்லிமெண்டில் மூச்சு விடக்காணோம்.
சில இணைய இதழ்கள், “பிரதமர் அவர்களே! துடைப்பத்தை தூக்கிக்கொண்டு தெருக்களில் நாடகமாடுவதை விட போபாலுக்குப் போய் அந்த விஷத்தை தூய்மைப்படுத்துங்கள்என்றும் சொல்லியாயிற்று.
அதுசரி, “நீ கொலைகாரன். எனவே உன்னை என் நாட்டுக்குள் விட மாட்டேன் என்று  அமெரிக்க சொல்ல, இல்லை எங்க ஆள் ரொம்பப் பெரிய ஆள். அவர் எத்தனை கொலை செய்தாலும் நீ வரவேற்கத்தான் வேண்டும் விசா தா தாஎன பார்ட்டி கெஞ்ச, அது முடியாமல் போன போது, ”இரு உன்னிடம் விசா வாங்குவதற்காகவே மிருக பலத்துடன் ஆட்சி அமைக்கிறேன்”  என்று சவால் விட்டு அமெரிக்க விசாவுக்காகவே ஆட்சியில் அமர்ந்தது போல், வரக்கூடாது என்று சொன்ன அமெரிக்க மண்ணிலேயே காலடி வைத்து விட்டோமில்லையா? என சவடால் விடும் அமெரிக்க அடிமைகள் இருக்கும் வரை எத்தனை விஷவாயுக்கசிவுகளை ஏற்படுத்தினாலும் அமெரிக்கா நிமிர்ந்துதான் நடப்பான்.
அதனால்தான் 30 வருஷத்தில் நான்கைந்து அமெரிக்க அதிபர்கள் இந்தியா வந்து போய் விட்டார்கள். அது மாதிரி இந்தியப் பிரதமர்கள் (அமெரிக்க விசாவுக்காக சபதம் போட்டு பிரதமர் ஆன மோடி உட்பட) அமெரிக்கா போய் வந்து விட்டார்கள். போபால் விஷக்குப்பை பற்றி மூச்சு விடக்கூட இல்லை.
அடுத்து நவீன உலகின் குப்பை அரக்கன் மின்னணு குப்பைகள். எல்லா நாடுகளிலும் மின்னணுக் குப்பைகள் மலையாய்க் குவிந்திருப்பினும், வளர்ந்த (வல்லரசு) நாடுகளின் குப்பைக் கிடங்காக இந்த மின்னணுக் குப்பைகள் வளரும் நாடுகளுகளில் கொட்டப்படுவதையும் அதனால் சுற்றுப்புறக்கேடு நிகழ்வதையும் பரிதாபத்துடன் மட்டுமே பார்க்க முடிகிறது.
ஆப்பிரிக்காவின் கானா போன்ற நாடுகளில் இந்த வல்லரசுக் குப்பைகளை தரம் பிரிக்கவும், அதனால் கிடைக்கும் இரும்பு தாமிரம் போன்றவற்றை தினம் பத்து டாலர் கிடைத்தாலும் பரவாயில்லை என விற்றுப் பிழைக்கும் மக்களாகவும் அந்த ஏழை மக்கள் மாறி விட்டதால் அவர்கள் வைரஸ் நோய்களால் ஆட்பட்டும், அவர்களின் நீர்வளம் மின்னணுக் கழிவுகள் பூமியில் தேங்குவதால் விஷமாகியும் போன விபரீதம் நடந்து வருவதை டாக்குமெண்டரிகள் (குறும்படங்கள்) நமக்கு உணர்த்துகின்றன.
குப்பைகளைப்பற்றி காசி ஆனந்தன் ஒரு கவிதை சொல்வார், “ஆஃபிஸுக்கு அது குப்பைத் தொட்டி. குப்பை பொறுக்குபவனுக்கு அதுதான் ஆஃபிஸ்”. இதை சரியாகக் கையாள்வது கம்பியூட்டர்கள் மட்டுமே. கம்பியூட்டர்களின் குப்பைத் தொட்டிக்கு மறு சுழற்சித் தொட்டி (recycle bin) என்றுதான் பெயர்.
இன்றைக்கு நமக்கு தேவைப்படாதது, நாளை தேவைப்பட லாம். அதனால் குப்பைத்தொட்டியில் போட்டதை அதன் தேவையே இல்லை எனும் வரை குப்பைத் தொட்டியிலேயே விட்டு வைக்க வேண்டும் என்பது கம்பியூட்டர விதி. பொதுவாகப் பார்த்தால், சாப்பாட்டில் நாம் சேர்க்கும் சுவைக் கலவைகள் சாப்பிடும்போது தூக்கி வீசப்படுகின்றன. எல்லாவற்றிலும் உடலுக்குத் தேவையான சத்து மற்றும் மருந்து இருப்பினும் கறிவேப்பிலை, மல்லிக்கீரை மற்றும் சில பொருள்கள் தூக்கி வீசப்படுகின்றன. சில வீடுகளில் மட்டுமே வீணாகும் பிளாஸ்டிக் குப்பைகள் நேர்த்தியாக சேமிக்கப்பட்டு பழைய பிளாஸ்டிக் வாங்குபவர்களிடம் போடப்படுகின்றன. பேறும்பாலும் இந்த நேர்த்தி எல்லாரிடமும் கையாளப்படுவதில்லை.
தேவைகளை தேவைப்படுகிற நேரத்தில் தேவையான அளவு உபயோகிப்பதும், அதை உபயோகித்த பின் அதன் மறு சுழற்சிக்கான பாடத்தை தெரிந்து கொள்வதும் மனித சமுதாயம் அறியாதவரை குப்பைகள் நீங்காப் பிரச்னையாகவே இருக்கும்.
ஆளுக்கு இரண்டு செல்போன், அறைக்கு ஒரு டெலிவிஷன், கணக்கிலடங்கா மின்விளக்குகள், ஆளுக்கு ஒரு பைக், போதாதென்று இரண்டு பேருக்கு ஒரு கார், வீட்டில் ஸிஸ்டம், போதாததற்கு ஆளுக்கு ஒரு லேப்டாப்........... இன்னும் நான் சொல்லாமல் விட்ட பயன்பாடுகள். இதெல்லாம் நுகர்வோர் நோய்க்கலாச்சாரம் என அறிவுலகம் அலறுகிறது. இதில் இன்னொரு கேடும் சேர்ந்துள்ளது. உலகமயமாக்கம், தாராளமயம் என்ற பெயரில் இந்த நுகர்வுக்கலாச்சாரம் கூட இன்னொரு விஷத்தை விதைத்துள்ளது. அதுதான் இந்தியாவின் தனிச் சிறப்பான ரீஃபில் உபயோகம் ஒழிந்து யூஸ் அண்ட் த்ரோ உபயோகம் மலிந்துள்ளதால் குப்பைகளின் ஆதிக்கம் சமுதாயப் பிரச்னையாகவும் உருவெடுத்துள்ளது.
நபிகள் நாயகம் (ஸல்) வடிவைத்துத் தந்த சுற்றுச்சூழல் குர் ஆனின் மூலம், “உண்ணுங்கள். பருகுங்கள். அளவு கடந்து விடாதீர்கள் என்கிறது. நாயக வாக்கு, “ஆற்றின் கரையில் ஒழுச்செய்தாலும் மூன்று முறைக்கு மேல் ஒரு உறுப்பை கழுகுவதை வீண்விரயம் “ என்கிறது.

குப்பைகளைப் பற்றியே குப்பை(மலை)யளவு எழுதலாம். பயன்பாடு மட்டுப்படுத்தப்பட்டும், மறுசுழற்சி மிகச்சரியான விழிப்புணர்வுடன் செயல்படுத்தப் பட்டால் மட்டுமே குப்பைகளுக்கு விடிவு காலம் உண்டு.

Wednesday, September 28, 2016

இடம் பெயர்ந்த இருமேனி


இடம் பெயர்தல் பல வளங்களை தருகிறது. இடம் பெயர்தல் உயிர் பாதுகாக்கவும், கொள்கை பாதுகாக்கவும், வளர்ச்சிக்காகவும் என பல்வேறு நோக்கங்களுக்காக சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது. ஆனால் நவீன காலத்தில் பொருளுக்காக இடம் பெயர்ந்து இடம் பெயர்ந்த நாட்டின் தங்களின் பண்பாட்டுக்கூறுகளையும் விதைத்து நிமிர்ந்து பார்க்க வைத்தவர்கள் தமிழ் முஸ்லிம்கள். அதிலும் குறிப்பாக இருமேனி தமிழ் முஸ்லிம்களின் சரித்திரப் பக்கங்களையும், சமீப கால செயல்களையும் பார்ப்போம்.
தமிழ்நாட்டின் கிழக்குக் கோடியில் ராமேஸ்வரத்தை சமீபமாகக் கொண்ட இருமேனி இயற்கை வளம் பெற்ற ஊர்களில் ஒன்று. இங்கு நிலத்தடி நீர் பத்து அடியில் பீறிட்டு வந்த காலம் உண்டு. இப்போதும் இருபது இருபத்தைந்து அடியில் நீர் வரும் வளம் கொண்ட ஊர். எனக்குத்தெரிந்து நான் இருமேனி இறைப்பணிக்கு வந்து ஒரு வருடத்தில் 1994 ல் ஒரு பெருமழையில் கிணற்றில் வெறும் வாளியை விட்டு நீர் எடுத்ததை என் கண்ணாலேயே கண்டுள்ளேன்.
இன்று மக்களின் அடிப்படை வசதிகள், தேவைகள் அனைத்தும் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும்போது அது கூட இல்லாத ஒரு நேரத்தில் பொருளாதாரம் வேண்டி கடல் கடந்து சென்ற இருமேனிவாசிகள் உழைப்பை மூலதனமாகக் கொண்டு தங்களையும் தாங்கள் சார்ந்த நாட்டையும் வளப்படுத்தியதோடு, தங்கள் கையில் கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும், மார்க்க அறிவையும் எடுத்துச் சென்றனர்.
ஹிஜ்ரத் என்னும் இடம் பெயர்தல் நடக்காத மனிதரில்லை. அதனால் தானும் மற்றவர்களும் பலனடைந்த ஹிஜ்ரத்தாக அந்த இடம் பெயர்தல் அமைவதையே நன்மை என இஸ்லாம் அடையாளம் காட்டுகிறது. அந்த வகையில் இருமேனிவாசிகளின் இடம்பெயர்வு தந்த மறுமலர்ச்சியை எடுத்துக்காட்டுவதே இந்த கட்டுரை.
பிழைப்புக்காக சென்ற மக்கள் தங்களின் மார்க்க, இலக்கிய, சமூக நலப்பணிகளை எவ்விதம் மேற்கொண்டார் கள் என்பதை  சரம் சரமாகப் பார்ப்போம். இலங்கைக்கு இடம் பெயர்ந்து ஊர்த்தொடர்புடன் இருந்த மரியாதைக்குரிய அப்துல் அஸீஸ் அவர்களிடமிருந்து என் பார்வை ஆரம்பமாகிறது. மார்க்கப்பற்றும், வாழ்க்கைப்பேணுதலும் கொண்ட அம்மனிதர் மக்களால் இன்ஷாஅல்லாஹ் என்றே அழைக்கப்பட்டார்.
 காரணம், “நான், எனது, என்னால்தான்” என்ற அகம்பாவ வார்த்தைகளை உடைத்து அல்லாஹ்வால் மனிதனுக்கு  அறிமுகம் செய்யப்பட்ட வார்த்தை இன்ஷாஅல்லாஹ். அல்லாஹ் நாடினால் நடக்கும், செய்வேன், என்னால் எதுவுமில்லை என்ற பணிவை உள்ளடக்கிய அந்த வார்த்தைகளின் உயிராக அவரின் செயல்கள் இருந்தது. வைரக்கல் வணிகராக இருந்த போதும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத பண்பை அவர் பள்ளிவாசல் சென்று வீடு திரும்பும்போது கால்களின் மண்ணை துடைத்து விட்டு வீட்டுக்குள் வரும் செயல் உணர்த்தும். பள்ளிவாசல் மண் என் வீட்டுக்குள் வந்தாலும் அதற்கும் கேள்வி உண்டு என அதற்கு அவர் விளக்கம் சொல்வதுண்டு. அவர் எழுதிய மார்க்க நூற்கள் (பெயர் ஞாபகமில்லை) இரண்டு. தன் பணிகளூடே அவர் செய்த இறைத்திருப்பணி இது.
அதுபோன்றே பொருளாதாரம் தேடி சென்ற மலேஷிய இருமேனி வாசிகள் மரத்துக்கு வேர் போன்று கோலாலம்பூர் முதல் ஜொஹூர் வரை, சபா விலும் கூட ஆங்காங்கே நடக்கும் தமிழ் முஸ்லிம்களின் மார்க்க சேவைகளிலும், இந்திய முஸ்லிம் பள்ளிகளின் உருவாக்கத்திலும் துணை நின்றதை பார்க்க, கேட்க முடிகிறது. 
குறிப்பாக ஈப்போ பினாங்கு இரு மாநிலங்களிலும் தமிழ்முஸ்லிம் மார்க்கப்பணிகளில் இருமேனி வாசிகளின் பங்கு வெளிப்படையானது. சபா வில் தமிழ் முஸ்லிம் ஆலிம்கள் அறிந்த முகங்களில் இருமேனியின் ஹாஜி ஃபௌஸுத்தீன் அவர்களும், அன்னார் மருமகன் ஆஷிக்கும், ஈப்போவில் ஹாஜி பி எஸ் எ ஷாஹுல் ஹமீது அவர்களும், மௌலவீ முபாரக் அலீ அவர்களும், கோலாலம்பூரில் மர்ஹூம் டத்தோ ஹாஜி ஸலாஹுத்தீன் அவர்களின் தீன் ஜுவல்லர்ஸ்  (தற்போது அன்னாரின் பிள்ளைகள் நடத்தி வரும் நிறுவனம்) இவர்கள் அனைவரும் முகம் தெரிந்தவர்கள். தெரியாமலும் நிறையப்பேர் உள்ளனர்.
மலேஷியாவில் இருமேனி வாசிகளின் பணிகள் : மலேஷிய இருமேனி முஸ்லிம் ஜமாத் என்ற பெயரில் ஒன்றிணைந்து இருமேனி கூட்டமைப்பை உருவாக்கி ஒவ்வொரு இருமேனி வாசிக்கும் “நான் இருமேனியில் என் மக்களோடு இருக்கிறேன்” என்ற உணர்வை உண்டாக்குவது. (மொத்த நோக்கமும் இப்புத்தகத்தின் முதல் பக்கங்கள் சொல்லியிருக்கும்)
அதுபோக மலேஷியாவின் அனைத்து தமிழ்நாட்டின் ஊர்களும் ஒன்றுபட்ட அமைப்பிலும் இடம்பெறுவது. உதாரணமாக ஈப்போவின் PRIM  (persatuan India muslim perak) அமைப்பில் இருமேனி மலேஷிய வாசிகள் இடம் பெற்றுள்ளனர். கோலாலம்பூரில் PANGSAR PARK பகுதியில் உள்ள தமிழ் முஸ்லிம் மத்ரஸா, கோலாலம்பூரின் பெரும்பாலான மார்க்க உபன்னியாச நிகழ்வுகளின் ஏற்பாடு, சிறப்பு மார்க்க நிகழ்வுகளுக்கான பங்களிப்பு அனைத்திலும் இருமேனி தீன் ஜுவல்லர்ஸின் பங்களிப்பு மகத்தானது. பூச்சோங்க் பகுதியின் தமிழ் முஸ்லிம் மார்க்க நிகழ்வுகளின் மர்ஹூம் இருமேனி ஜைனுல் ஆபிதீன் அவர்களின் பங்களிப்பும், இப்போது அவர்களின் மகனாரின் பங்களிப்பும் மகத்தானது.
மலேஷியப் பத்திரிககைகளில் பிரதான எழுத்தாளர்களாக இருமேனி ஹாஜி பி எஸ் எம் ஷாஹுல் ஹமீது, இருமேனி செய்யது உஸ்மான் மற்றும் சிலரின் எழுத்தோவியங்கள் இடம்பெறாத புனித தினங்கள் இருக்க முடியாது. சில அமைப்புகளின் ஆலோசகர்களாகக் கூட நமது மக்கள் உள்ளதை மறுக்க முடியாது.
இப்படி எத்தனை எத்தனையோ…..!
இதே இருமேனியிலிருந்து புலம் பெயர்ந்த மக்கள் இருமேனிக்கு செய்த வளர்ச்சிப் பணிகளும், செய்து கொண்டிருக்கிற பணிகளும் ஏட்டில் அடங்காதது. ஆரம்ப காலத்திலிருந்து தங்கள் சம்பாத்தியத்தில் தங்கள் குடும்பத்தை வளமாக வைத்திருந்தது எல்லாவற்றையும் விட மேலான பணி. காரணம் குடி உயரக் கோல் உயரும் என்பது தமிழ் அறநெறி. அடுத்து இருமேனி முஸ்லிம் சமுதாய அறப்பணிகள் பெரும்பாலும் கடல் கடந்த மக்களாலேயே அதிகம்.
அரபு இருமேனி முஸ்லிம் நலச்சங்கம் அரபு நாட்டின் இருமேனி மக்களை ஒன்றிணைத்ததுடன் முதன் முதலாக பள்ளிவாசலின் தலைவாயிலை ஒட்டி இரண்டு கட்டிடங்களை நிறுவி தங்கள் பெயரை இறையேட்டில் பதித்தது முதல் அடுத்தடுத்து இருமேனியின் பெரும்பாலான களப்பணிகள் கடல் கடந்த மக்களாலேயே நிறைவேறின. 1994 ல் புதிய பள்ளிவாசல் குடியேற்றத்திலும், அது முழுமை பெற்றதிலும் அரபு மற்றும் மலேஷிய இருமேனியின் பங்கை மறக்க முடியாது. பிறகு 2000 க்கு பிந்தைய பள்ளிவாசல் புணர் நிர்மாணத்தை கோலாலம்பூர் தீன் ஜுவல்லர்ஸ் அதிபர் டத்தோ ஹாஜி எஸ் எம் ஸலாஹுத்தீன் தனி மனிதராக ஏற்றுக் கொண்டதும், இருமேனி மய்யவாடி சுற்றுச்சுவர் மற்றும் ஜனாஸா தொழுகைக்கான பள்ளிவாசல் பணியை மலேஷிய இருமேனியும், ஊரணிக்கு பக்கத்திலுள்ள மய்யவாடியின் பராமரிப்பையும், மத்ரஸா கைராத்துல் அஸீஸிய்யாவை தன் குடும்ப முன்னோர் அலித்தம்பி லெப்பையின் பெயரால் சிறு திருமண மண்டபம் போல் கட்டிக்கொடுத்ததும் மலேஷியா வாழ் தல்ஹா டாக்டர் அவர்களும் குடும்பத்தவரும் ஏற்றுக்கொண்டதும் எனக்குத் தெரியாத பலபணிகளின் புரவலர்களாக கடல் கடந்த இருமேனிவாசிகள் இருப்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.
அது மட்டுமல்ல, இருமேனி வாழும் இறைநேசர் செய்யது முஹம்மது வலியுல்லாஹ்வின் வாழ்வு “அறிவூற்று அல்லாமா” என்ற பெயரால் கம்பம் பீர்முஹம்மது பாகவீ அவர்களால் வெளியிடப்பட்டு பல ஆண்டுகளுக்குப்பின் அதன் பிரதிகள் கிடைக்காத வேளை, அப்புத்தகத்தின் இரண்டாம் பதிப்பை செய்யது உஸ்மான் தனது முஸ்தஃபா பப்ளிகேஷன் மூலம் வெளியிட முணைந்த போது, அதன் பொருளாதாரத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவர் சிங்கப்பூர் வாழ் இருமேனிவாசி ஜனாப் வருசை அஹமது அவர்கள்தான். இருமேனி பற்றிய செய்திகள் உலகறிய வலம்வருவதை விரும்பும் ஒரு இருமேனியாரின் ஆர்வம் அது.
என்னுடைய நினைவில் நீங்காது நிற்கும் சில விஷயங்கள், 1994 ல் மலேஷிய இருமேனிவாசிகள் அவ்விழாவில் தங்கள் ஒவ்வொருவரின் பங்கையும் எவ்வளவு ஆர்வத்துடன் செய்தனர் என்பதற்கு திறப்புவிழா அன்று கொடுக்க வேண்டிய பிரியாணி பொட்டலங்களை மடிப்பதற்கான பாதுகாப்பான பேக்கேஜ் பேப்பர்களை பலபேர் பங்கு பிரித்துக் கொண்டு வந்து சேர்த்து, “நீங்கள் சாப்பிடும் பிரியாணியை எங்கள் மலேஷியப் பேப்பரிலாக்கும் கட்டிக் கொடுத்திருக்கிறோம்” என்று பெருமிதம் கொண்டதிலாகட்டும், பலர் தங்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு வந்தது போல் வந்து ஒரு மாத அளவில் அந்நிகழ்சியில் தங்கள் பங்களிப்பை செய்ததிலாகட்டும், அதில் ஒரு தலைநிமிர்வு, கௌரவம் இருந்தது. இருமேனி என்ற பெயர் அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தியிருந்த பெருமிதம் அது.  
தனிப்பட்ட முறையில் நான் இமாமாக இருந்த காலத்தில் எட்டாண்டுக் காலம் நுக்தா என்ற பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தியபோது அது தமிழகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. பிரபல ஆலிம்களின் பயான்களில் மேற்கோளாக எடுத்துக்காட்டப்பட்ட அதிசயமும் நிகழ்ந்தது. அது 1993 ல் இருமேனியின் சகோதரர்கள் முஹம்மது அர்ஷாத் (சம்மாட்டி அப்பா மகன்) செய்யது உஸ்மான் ஆகியோரை வலதுகரமாகக் கொண்டு அன்றைய முஅத்தின் ஸக்கரியா அப்பாவின் பரக்கத்தான நானூறு ரூபாய் முதலீட்டில் முதல் புத்தகத்துக்கான வெளியீடு இல்லாமலேயே முதல் புத்தகத்தை நூறு ரூபாய் கொடுத்து சீதக்காதி ராவுத்தர் வாங்கியதிலிருந்து அதை டாப் கியர் போட்டு தூக்கியதில் மலேஷியாவின் புரவலர்கள் நிறையப்பேருக்கும், நுக்தாவுக்காக தங்கள் சங்கத்தில் பேசி முதல் டொனேஷன் ஆயிரம் ரூபாய் அனுப்பிய AIMWAN சங்க அன்றைய செயலர் அப்துல் வஹ்ஹாப் அண்ணன் (துவக்க முதல் இறுதிவரையான நுக்தாவின் கதை ஒரு நாவல் நீளம் எனவே இவ்வளவு சுருக்கம்) ஆகியோரும் அதன் ஏழாவது வருட வளர்வில் அச்சுக்கூட கடன் பன்னிரெண்டாயிரத்தை வேண்டுகோள் வைத்தவுடன் கொடுத்த ஹாஜி டத்தோ ஸலாஹுத்தீன் அவர்களும் இன்னும் எழுத இடமில்லாதவர்களும் என் ஆயுள் வரை என் துஆக்களில் இடம் பெறுபவர்கள்.
இறுதியாக மக்காவிலிருந்து மதினா இடம் பெயர்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படிச்சொல்வார்கள், “நான் மக்காவிலிருந்து இடம் பெயர்ந்து மதினாவுக்கு வந்தவன். ஆனால் மக்காவுக்காக நான் எதுவும் செய்யத் தேவையில்லாத அளவு என் தந்தை இப்ராஹீம் (அலை) தங்களின் துஆக்களால் மக்காவை வளப்படுத்தி விட்டார்கள். என்னை ஆதரித்த மதினாவை வளப்படுத்த என் துஆக்களை அர்ப்பணிக்கிறேன்” என்பார்கள். அப்படித்தான் நடந்தது.

கடல் கடந்த இருமேனி வாசிகள் தங்களின் உழைப்பால், வியாபாரத்தால் அரபுலகின், மலேஷியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் ஒரு சிறு பங்கை ஆற்றுவதுடன், சொந்த தாய்மண்ணை வளப்படுத்தி அல்லாஹ்வின் அருளுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துஆவுக்கும் பாத்திரமாகி நிற்கிறார்கள். கியாம நாள்வரை நிற்பார்கள்.

ஹஜ் வழியனுப்பு நிகழ்ச்சி

அன்பான சொந்தங்களே! அஸ்ஸலாமு அலைக்கும். ஹஜ் இஸ்லாத்தின் ஒரு கடமை. அதற்கு மட்டும் ஏன் இத்தனை ஏற்பாடுகள்? நாம் சிந்திக்க வேண்டும். கலிமா நம் ஈமான் பாதிக்கப்படும்போது புதுப்பிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். தொழுகை தக்பீர் கட்டியதிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரையிலான கால அளவிலான கடமை. நோன்பு ரமளான் ஒன்றில் துவங்கி ரமளான் இறுதியில் முடியும் குறிப்பிட்ட காலக்கடமை. ஆனால் ஹஜ்ஜின் கடமைக்காலம் என்று பார்த்தால் ஹஜ் பிறை 8 ல் துவங்கி பிறை 12 வரையிலான 5 நாள் கடமைக்கு அல்லாஹ்வே “அல்ஹஜ்ஜு அஷ்ஹுரும் மஃலூமாத்” (ஹஜ் அறியப்பட்ட சில மாதங்கள்) என்கிறான். நபிகள் நாயகம் (ஸல்) அந்த மாதங்கள் ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் என்று மூன்று மாதங்களைச் சொன்னார்கள். இதிலேயே ஹஜ் மற்ற கடமைகளைப் போல் துவங்கி முடியும் சாதாரணக் கடமை அல்ல என்பதும் துவங்குவதற்கு முன்பே 65 நாள் ஏற்பாடுகளையும், முடிந்த பின் 18 நாள் உணர்வுப் பூர்வமான அனுபவிப்பும் கலந்தது என்பதை சாதாரண அறிவிலேயே நாம் புரிய முடியும்.
இந்தக் கடமைக்கு மட்டும் ஏன் பிரத்தியேகமாக வழியனுப்பும் வஸிய்யத்தும்?
அல்லாஹ் சொன்ன முன்னேற்பாடுகளில் உள்ளதுதான் இது. ஒரு 40 நாள் கடமைக்கான பயணமும், சங்கடங்களும், நீண்ட சிரமத்திற்குப்பின் நிறைவேற்றலும் உள்ள ஹஜ்ஜுக் கடமைக்கு செல்லும் முன் விடைபெறுவதும், மக்களுக் கிடையிலான கடன்களில் இருந்து விடுதல் அடைவதும், (அது கடனாக அல்லது தான் அவர்களுக்குச் செய்த நீதிக்குப் புறம்பான காரியங்களுக்கு நிவாரணம் தேடுவது……. இப்படி) அது மட்டுமல்ல. இப்பயணத்திலேயே தன் உயிர் போய்விடக்கூடாதா? என ஏங்கும் முஸ்லிம்கள்தான் அதிகம். எனவே விடைபெறுதல், தவறுகளுக்காக பரிகாரம் பெறுதல், மரண சாசனம் செய்தல் என அத்தனையும் நிகழ்கிறது. அவை அதீத விளம்பரத்துடன் செய்யப்படும்போது விமர்சனமாகிறது. தன் சம்பந்தப்பட்ட மனிதர்கள் அளவில் மட்டும் இந்த ஏற்பாடு அமையுமாயின் அது ஆரோக்கியமானதே!
ஹஜ் செய்த ஆணுக்கு ஹாஜி என்றும், பெண்ணுக்கு ஹாஜியா என்றும் பட்டம் ஏன்?
சிந்திக்க வேண்டிய கேள்வி. நிறையப்பேர் இதை அவர்களுக்கான மரியாதை என்று நினைத்துக் கொண்டிருப் பதால் இதெல்லாம் தேவையா? என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் ஹாஜி என்பதும், ஹாஜியா என்பதும் அவர்களின் கழுத்துக்கு வைக்கும் கத்தி. எந்த நேரத்திலும் அவர்களின் செயல்கள் கண்காணிக்கப்படுகிறது என்பதற்கான அடையாளம். காரணம். தொழுகை சாகும் வரை கடமை. அதற்கான பரிசு மறுமையில் மட்டுமே. நோன்பு ஒவ்வொரு வருடமும் கடமை. அதற்கான பரிசும் மறுமையில் மட்டுமே. ஸக்காத்தும் அது போலவே. ஆனால் ஹஜ்ஜுக்கான பலன் சொர்க்கம். அது நிறைவான ஹஜ் முடிந்தவுடன் நிச்சயமாகிறது. அதுவும் வாழ்வில் ஒருமுறையே கடமை என்பதால் அது கிடைத்து விட்ட ஆனந்தம் ஒவ்வொரு ஹாஜிக்கும் உண்டாகிறது. எனவே சமுதாயம் அவர்களை ஹாஜி, ஹாஜியா என்ற அடைமொழிகளால் அழைத்து “சொர்க்கத்தைப் பெற்ற நீ மறந்தும் கூட தவறி விடாதே!” என எச்சரித்துக்கொண்டே இருப்பதன் அடையாளம்தான் அப்பட்டம். இது டத்தோ மற்றும் டத்தின் பட்டம் பெற்றது போல. அப்பட்டம் கிடைக்கும் வரை ஒரு வி ஐ பி எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். அவர் அங்கீகரிக்கப் பட்டு டத்தோ மற்றும் டத்தின் ஆகி விட்டால், சட்டப்புறம்பான காரியங்களில் அவர் பெயர் வந்து விடக்கூடாது என்பதில் அவரும் மக்களும் மீடியாக்களும் கவனமாக இருப்பர். அதுதான் ஹாஜிக்கும், ஹாஜியாவிற்கும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே ஹஜ்ஜை நிறைவேற்றிய பின் தன் தோழர் அபூபக்ரை ஹாஜி என்றழைத்தது வரலாற்றில் காணப்படுகிறது. இது ஒரு பெரிய விஷயமல்ல.
ஹஜ்ஜுக்கு செல்லும் ஹாஜிகள் இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டு முழுமையான ஹாஜிகளாக திரும்பி வந்து சேவையாற்ற அல்லாஹ் அருள் புரிவானாக!

ஹஜ்ஜுப்பெருநாள்
ஹஜ் செய்தவர்களும், ஹஜ் செய்ய செல்கிறவர்களும் உளப்பூர்வமாக உணர்கிற, ஹஜ் செய்யாதவர்கள் பயான்களாலேயே ஒரு குடும்பத்தின் தியாகத்தை  எண்ணிப்பார்க்கிற அற்புதம்தான் ஹஜ்ஜுப்பெருநாள் தரும் பாடம். எல்லாக் கடமைகளுக்கும் இடம் குறிக்கப்படவில்லை. ஹஜ்ஜுக்கடமைக்கு மட்டும் இடம் குறிப்பாக்கப்பட்டுள்ளது. துல்ஹஜ் எட்டாம் நாள் ஹாஜிகள் தங்கும் இடம் மினா. இது வெட்டவெளியான ஒரு இடம். ஒன்பதாம் நாள் ஹாஜிகள் தங்குவது அரஃபா. இதுவும் பிரம்மாண்டமான மைதானம். அன்று இரவு ஹாஜிகள் தங்க வேண்டியது முஸ்தலிஃபா பெருவெளி. பிறகு மீண்டும் மினா. இவைகளில் ஹாஜிகள் தங்கும் ஐந்து நாள்களே ஹஜ்ஜின் கடமை நாட்கள்.
இதில் அதிசயம் என்னவெனில் மினாவிலும், அரஃபாவிலும் பெயருக்கு ஒரு பள்ளிவாசல் உண்டு. மற்றபடி அது மைதானம்தான். மூன்று மைதானங்களில் தங்கி இருப்பது ஒரு வணக்கமா? என சிந்தித்தால், இப்ராஹிம் நபி (அலை) தன் குடும்பத்துடன் அலையாய் அலைந்த இடங்கள் இவை என்பதும், அக்குடும்பத்தவர் எந்த சிந்தனையுமின்றி அல்லாஹ்வின் அடிமைகளாக இருந்த தியாகத்தை ஏற்றுக்கொண்டதன் விளைவே உலக முடிவு நாள் வரை உலக மூஸ்லிம்கள் அவர்கள் தங்கிய இடங்களில் தங்கவும், அதிலேயே வணக்கம் புரியவும் கடமையாக ஆக்கினான்.
இப்ராஹிம் நபி (அலை) அவர்கள் நின்று கஃபா கட்டிய இடத்தில் தொழுவதை சிறப்பாக ஆக்கினான் அல்லாஹ். தன் பிள்ளையின் தாகம் தீர வேண்டி தண்ணிர் தேடி ஸஃபா மர்வா குன்றுகளுக்கிடையே ஹாஜரா அம்மா ஓடியதை எல்லா ஹாஜிகளுக்கும் தொங்கோட்டக் கடமையாக்கினான் அல்லாஹ். அம்மா ஹாஜரா (அலைஹா) அவர்களுக்கும், மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கும் பிரத்தியேகமாக தந்த ஸம்ஸம் நீரை அருந்துவதை புனிதமாகவும், அப்படி அருந்தும்போது என்ன கேட்டாலும் தருவதாகவும் வாக்களித்தான்.
சுருக்கமாக ஹஜ்ஜுக்கடமையும் ஹஜ்ஜுப்பெருநாளும் ஒரு குடும்பத்தின் தியாக வெளிப்பாடாக அமைந்திருப்பது அல்லாஹ் சொன்னபடி நீங்கள் நடந்தால் உங்கள் எண்ணப்படியே அல்லாஹ் உங்கள் வாழ்வை ஆக்கிடுவான் என்ற செய்தி சொல்கிறது. .

உணர்வோம். உயர்வோம். ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள்.

ஏட்டுப் படிப்பும் ஏற்றமான படிப்பும்

தமிழில் கல்விக்கும் கலவிக்கும் ஒரே வித்தியாசம். கல்வியில் புள்ளி உண்டு. கலவியில் புள்ளி இல்லை. கல்வி என்பது படித்தல். கலவி என்பது படுத்தல். கல்வி சமுதாயத்தை மேம்படுத்துவது. கலவி மேம்பட்ட சமுதாயத்தை உருவாக்குவதற்காக படுப்பது. கல்வியைப் படிப்பது பள்ளிக்கூட அறை. கலவியில் இருப்பது பள்ளியறை. ஆனால் இரண்டுக்கும் நோக்கம் ஒன்றுதான். அது சமுதாய மேம்பாடு.
சமுதாய முன்னேற்ற நோக்கமின்றி காசுக்காக மட்டும் படிப்பது அறிவு வேசித்தனம். சமுதாய முன்னேற்றத்துக்கான மனித வளம் பெருக வேண்டும் என்ற நோக்கத்திலல்லாது மற்றவரின் தற்காலிக உடல் பசி போக்க கலவியில் ஈடுபடுவது வேசித்தனம் என்பது சொல்ல வேண்டியதில்லை.
கல்வி என்பது வீட்டின், நாட்டின், உலகின், (முஸ்லிமாக இருந்தால்) மறு உலகின் நன்மைக்கானது மட்டுமே. கலவி என்பது என் குடும்பம் வம்சத்தால், பரம்பரையால், என் மார்க்கத்தால் புதிய எழுச்சி காணும் பிள்ளைகளை உருவாக்குகிறது என்ற எண்ணத்துடன், தன் துணையுடன் மட்டுமே துயில்வது. நோக்கம் மாறும்போது கல்வியும் கலவியும் புனிதத்துவம் இழக்கிறது.
சமீப காலமாக மார்க்கக் கல்வியை விட்டு மக்களை திசை திருப்பி அவர்களை உலகறியச்செய்யப் போகிறோம் என்று கிளம்பியுள்ள முஸ்லிம் படிப்பாளிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து போடும் கோஷம், “இந்த ஆலிம்கள் சமுதாயத்தை அறிவால் பின்னுக்குத்தள்ளி விட்டனர். கல்வியை மார்க்கக்கல்வி, உலகக் கல்வி எனக் கூறு போட்டு விட்டனர். இதனால் முஸ்லிம்கள் இன்னும் பின்னுக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்பது தான் அது.
கொஞ்சம் யோசிப்போம். அல்லாஹ் முதல் வார்த்தையாக “இக்ரஃ” – படி என்று சொன்னானே! அப்போது யாரை நோக்கி அவ்வார்த்தை சொல்லப்பட்டது? இஸ்லாமே அறிமுகப் படுத்தப்படாத மக்களை நோக்கியல்லவா? அது எதை குறியீடாகக் காட்டுகிறது?
”கல்வி உன்னை புரிய வைக்க உனக்குத் துணை புரிய வேண்டும். அடிமை என்று எவனும் இல்லை. அபூ ஜஹ்லுக்கு உரிய வாழும் உரிமை பிலாலுக்கும் ஸுஹைலுக்கும் உண்டு. அபு லஹ்புக்குறிய ஆடை முழுமையாக உடுத்தும் உரிமை அவனின் அடிமைக்கும் உண்டு. இதை நீ உணர உன்னை நீ படி. அதுதான் உன் முதற்படி. அதன் பிறகுதான் எல்லாம்”
அடிமை தான் அடிமையாக இருக்கிறோம் என்பதை உணர்ந்தால்தான் போராட்ட குணம் வரும். தனக்குத் தெரியாததை தெரியாது என உணர்பவன் பாதி அறிவாளி என்கிறது உலகம். இந்தப் படிப்பை முதலில் படிக்கச் சொல்கிறது இஸ்லாம். இது பொதுமனிதனைப் பார்த்து சொல்லப்பட்டது. காரணம் அந்த வசனம் இறங்கிய நேரம் இஸ்லாமின் அடிப்படை கூட அறிமுகமாகவில்லை.
பின் ஆலிம்கள் ஏன் உலகக் கல்வி மார்க்கக் கல்வி என கூறு போட வேண்டும்? என்றால், முஸ்லிமுக்கு கல்வி என்பதே நீதி, நேர்மை, சட்டப்பணிவு, மனிதாபிமானம், வாய்மை …….. இப்படி மனிதத் தன்மையின் சாராம்சங்கள் அனைத்தும் பொதிந்ததுதான் கல்வி. ஆனால், பொதுக் கல்வியின் கோளாறுகள் என்ன?
இங்கே மருத்துவனும் மருந்து விற்பவனும் ஒரே ஜாதியாக இருக்கிறான். அது விற்பனையாளன் என்கிற ஜாதி. பயங்களைக் காட்டி பணத்தைப் பிடுங்குபவன் மருத்துவனா? தைரியம் சொல்லியே நோயைக் குறைப்பவன் மருத்துவனா? மருத்துவத்துறையில் உலக மயமாக்கம் என்ற பெயரில், சாதாரண மருந்துகள் கூட அசாதாரண விலையில் இறக்குமதி செய்யப்படும் கொடுமையும், அதுதான் எழுதிக்கொடுக்கப்பட வேண்டும் என்று அரசாலேயே நிர்பந்திக்கப்படும் கொடுமையும் நடக்கிறதே? இதை இஸ்லாமிய வழி மருத்துவமாக ஏற்க முடியுமா?
வழக்கறிஞன் நீதியின் சார்பாக நிற்பதை விட கட்சிக்காரனின் சார்பாக வழக்காடுவதும், கடைகளைப் போட்டுக்கொண்டு வாங்கித் தருகிற நஷ்ட ஈட்டில் இத்தனை சதவிகித கமிஷன் என்று பேரம் பேசியே வழக்கு நடத்தும் கட்டப் பஞ்சாயத்துக்காரனாகவும் இருப்பதும், நிரபராதியை குற்றவாளியாக்க வேண்டுமா? குற்றவாளியை நிரபராதியாக்க வேண்டுமா? அந்தக் கிரிமினல் (?) வக்கீல் அதில் கெட்டிக்காரர் எனும் அளவு வழக்கறிஞனே கிரிமினல் தனமாக யோசிப்பதும் இஸ்லாம் அனுமதிக்கும் படிப்பா? மூதறிஞர் ராஜாஜி குற்றவாளிக்கு சார்பாக வழக்காடும்போதெல்லாம் சொல்வாராம், “எனவே குற்றவாளியின் குற்றத்துக்கான ஆதாரங்களை காவலர்கள் சரியாக நிரூபிக்காததால் என் கட்சிக்காரனை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்பாராம். இஸ்லாமிய நெறியும் அதுதானே?
வழக்கு தெரியாமலேயே சாட்சிகளின் அடிப்படையில் தீர்ப்புச் சொல்பவன், நீதி என்னவென்று தெரிந்தும் நிரபராதிக்கு எதிராகத் தீர்ப்புச்சொல்பவன் இப்படி சில நீதிபதிகளின் நடவடிக்கைகளை நரகவாதியின் நடவடிக்கைகள் என்றார்களே அண்ணல் நாயகம் (ஸல்) அவர்கள். நெஞ்சைத் தொட்டுச்சொல்லுங்கள், இன்றைய நீதிபதிகள் யாராவது சுவனத்திற்குரியவர்கள் எனக்கூற முடியுமா?    
நான் சொன்னது இரண்டு துறைகள்தான். இஸ்லாமிய வட்டியில்லா வங்கி முறையை இந்தியாவே அங்கீகரிக்கும் முடிவுக்கு வரும்போது இன்னும் நம்முடைய பையன் PNI வட்டிக்கணக்கு போட்டு பரீட்சை எழுதுகிறானே? இது இஸ்லாமியக் கல்வியா?

சுருக்கமாக எழுதப்படிக்க மட்டுமான ஆரம்பக் கல்வி மட்டுமே இன்றையக் கல்வியில் இஸ்லாமிய கல்வியாக இருக்க முடியும். மாறாக, மறுமைக்கு ஆதாரமாக நம்மை ஒரு காமிரா கண்காணிக்கிறது என்ற உணர்வுடன் காலை எழுந்ததிலிருந்து ஒவ்வொரு செயலிலும் அல்லாஹ்வை நினைவு கூறுவது, வியாபாரத்தில் நேர்மை, தொழிலாளர்களிடத்தில் இரக்கம், பிள்ளைகளிடம் பாசம், ஒழுக்க மாண்மியங்களை அவர்களுக்கு குர் ஆனின் நபிமொழியின் அடிப்படையில் விதைப்பது, கடமைகளில் குடும்பமே கண்ணும் கருத்துமாக இருப்பது, சக மனிதர்களை நம் மனிதர்களாக எண்ணுவது, சுருக்கமாக மனிதாபிமானம் பேணுவது……….. இப்படி மார்க்க அறத்துடன் வாழச்செய்யும் மத்ரஸாக்கல்வியே கல்வி. மற்றவைகளை பிழைப்பதற்கான வழி, அதுவும் தப்பாக! என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.    

(இது மலேஷிய இருமேனி ஜமாத் மலர் வெளியீட்டுக்காக 2016 ஆகஸ்டில் எழுதியது)