Thursday, September 29, 2016

வானம் அண்ணாந்து பார்த்த வள்ளல் நபி

மீண்டும் ஒரு மிஃராஜின் நினைவு. மக்கள் தொடர்பு சாதனங்கள் இரண்டு வகை உண்டு. ஒன்று எழுத்து மற்றும் ஒலி வடிவிலானது. இரண்டாவது ஒளி (காணொளி) வகையிலானது. இஸ்லாம் தத்தித் தவழ்ந்த துவக்க காலத்தில் முந்தைய வேதங்கள் அறிந்த பண்டிதர்களால் எழுத்து வடிவிலான ஆவணங்கள் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) பரிகசிக்கப்பட்டதுண்டு. அவ்வப்போது அத்ற்கான பதிலடிகளும் குர் ஆன் மூலம் இறங்கியதுண்டு. எல்லாமே சம்பவங்களின் அடிப்படை. (முந்தைய வரலாறுகள் காட்டி, “உம்மிடம் அப்படி ஏதேனும் உண்டா? எனக் கேட்கப்படும்போது, அந்த வரலாற்றையும் அதில் அவர்கள் மறைத்து சுயலாபம் பார்த்தவைகளும் சொல்லி அவர்களின் மூக்கறுக்கப்பட்டதுண்டு)
ஆனால் உலகம் சிறியது. இது போன்ற லட்சக் கணக்காண மடங்கு பெரியது அல்லாஹ்வின் இராஜ்ஜியம் என்பதை குர் ஆன் சொன்னபோது, எட்டிய தூரம் வரை மட்டுமே உலகம் என நம்பிக்கொண்டிருந்த மக்களுக்கு அந்த எட்டாத தூரத்தையும் காட்டித்தர அல்லாஹ் செய்த ஏற்பாடுதான் மிஃராஜ் என்ற உயிர் உடலுடன் கூடிய விஷுவல் அனுபவம்.
தத்துவத்தை மட்டும் சொல்லி இஸ்லாம் வளர்ந்திருக்க முடியாது என்பதற்கு மிஃராஜ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. மரணத்திற்குப்பின் தான்  நிஜ வாழ்க்கை. அங்கு விசாரணை உண்டு. சொர்க்கம் உண்டு. அதில் சுகந்தம் உண்டு. நரகம் உண்டு. அங்கு நாராசம் உண்டு என்பதை வெறும் தத்துவமாக அன்றி, தரமான நிரூபணமாகவே மிஃராஜின் மூலம் காட்டினான் அல்லாஹ்.

இந்த மிஃராஜ் அந்த மறு உலகின் தன்மைகளை திரும்பத் திரும்ப கேட்கும் நமக்குள் விதைக்கட்டும். நல்லறிவு மலரட்டும். இன்ஷா அல்லாஹ்.